உள்ளாட்சி தேர்தல் நேரத்தில் தேமுதிகவை விட்டு ஓடும் நிர்வாகிகள் - 3 மா.செக்கள் திமுகவில் ஐக்கியம்
சென்னை: தே.மு.தி.க நாகை மாவட்ட செயலாளரும், மயிலாடுதுறை சட்டசபைத் தொகுதி, முன்னாள் தேமுதிக எம்.எல்.ஏ.,வுமான அருள்செல்வன், தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் ஜெயப்பிரகாஷ், தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் பரமசிவம் ஆகிய மூவரும் நேற்றிரவு மு.க. ஸ்டாலினை சந்தித்து, தி.மு.கவில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது மாவட்ட செயலாளர்களுக்கு அதிருப்தி தொடர்கிறது. இதனால் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழத் தொடங்கியுள்ளன. கடந்த சில மாதங்களுக்குள்ளாகவே தேமுதிகவில் இருந்து 15க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்களும், முக்கிய நிர்வாகிகளும் விலகி திமுக, அதிமுகவில் இணைத்துக்கொண்டுள்ளனர். உள்ளாட்சி தேர்தல் நேரத்தில் நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகுவது அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
சட்டசபைத் தேர்தலில் தேமுதிகவை இழுத்து பலமான கூட்டணி அமைக்க முயற்சி செய்தது திமுக. பல கட்ட பேச்சுவார்த்தைகளை ரகசியமாக நடத்தியது. ஆனால் தேமுதிகவோ மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து தேர்தலை சந்தித்தது. இது திமுகவை மட்டுமல்ல தேமுதிக நிர்வாகிகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனால் ஆங்காங்கே தேமுதிக நிர்வாகிகள் திமுகவுக்கு தாவினர்.
விலகிய மாவட்ட செயலாளர்கள்
சட்டசபைத் தேர்தல் நேரத்தில் வடசென்னை மாவட்ட தேமுதிக மாவட்ட செயலாளர் யுவராஜ் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தேமுதிக மாவட்ட செயலாளர் தினேஷ் ஆகியோர் திமுகவில் இணைந்தார். திருப்பூர் தெற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் கீர்த்தி ஜி.சுப்பிரமணியம் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைத்துக்கொண்டார். தொடர்ந்து நிர்வாகிகள் திமுகவிற்கு தாவினர்.
சந்திரகுமார் அணி
கொள்கை பரப்பு செயலாளராக இருந்த வி.சி.சந்திரகுமார் தலைமையில் சி.எச்.சேகர் (திருவள்ளூர்), பார்த்திபன் (சேலம் மேற்கு), என்.கார்த்திகேயன் (திருவண்ணாமலை வடக்கு), விஸ்வநாதன் (வேலூர் மத்தி), செந்தில்குமார் (ஈரோடு வடக்கு) என மேலும் 5 மாவட்ட செயலாளர்கள் தேமுதிகவில் இருந்து கடந்த ஏப்ரல் 4ம் தேதி நீக்கப்பட்டதால், மக்கள் தேமுதிகவைத் தொடங்கினர். பின்னர் இவர்களும் மக்கள் தேமுதிகவை திமுக உடன் ஐக்கியம் செய்தனர்.
முக்கிய நிர்வாகிகள் விலகல்
தேமுதிக தேர்தல் பொறுப்பாளராக பதவி வகித்த கே.ஆர்.வீரப்பன், டெல்லி மாநில செயலாளர் தட்சிணாமூர்த்தி, தேமுதிக தலைமை நிலைய செயலாளராக இருந்த கே.எஸ்.மலர்மன்னன், தொழிற்சங்க செயலாளராக இருந்த சவுந்திரபாண்டியன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும் கட்சியில் இருந்து விலகி திமுக, அதிமுகவில் இணைந்தனர்.
3 மாவட்ட செயலாளர்கள்
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தேமுதிகவில் ஆலோசனை நடைபெற்று வரும் நிலையில், விஜயகாந்த் மீது அதிருப்தியில் உள்ள நிர்வாகிகள் திமுக பக்கம் சாய்ந்து வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்ட தேமுதிக செயலாளரும், முன்னாள் சட்டசபை உறுப்பினருமான ஆர்.அருள் செல்வன், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் ஜே.பி. (எ) வி.ஜெயபிரகாஷ், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட தேமுதிக செயலாளர் தாளோ.பரமசிவம் ஆகியோர் தேமுதிகவில் இருந்து விலகி, ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.