தயவு செய்து அந்த ம.ந.கூ.வில் இருந்து வெளியே வாங்க கேப்டன்: நிர்வாகிகள் கோரிக்கை
சென்னை: மக்கள் நலக் கூட்டணியில் இருந்து முதலில் வெளியேறுமாறு தேமுதிக தலைவர் விஜயகாந்தை மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்த தேமுதிக படுதோல்வி அடைந்தது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் தான் போட்டியிட்ட உளுந்தூர்பேட்டையில் டெபாசிட் இழந்தார்.
இந்நிலையில் தேர்தல் தோல்வி குறித்து விஜயகாந்த் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகளில் பலரும் அவரிடம் வைத்த கோரிக்கை என்னவென்றால், கேப்டன் தயவு செய்து முதலில் அந்த மக்கள் நலக் கூட்டணியில் இருந்து வெளியே வாங்க என்பது தானாம்.
மக்கள் நலக் கூட்டணியுடன் தொடர்ந்து சேர்ந்திருந்தால் உள்ளாட்சி தேர்தலிலும் சட்டசபை தேர்தல் போன்று படுமோசமான தோல்வியை சந்திக்க வேண்டி இருக்கும் என்று மாவட்ட செயலாளர்கள் எச்சரித்தார்களாம்.
திமுக நம்மை கூட்டணிக்கு எதிர்பார்த்த நிலையில் அதை ஊடகங்களும் செய்தி மேல் செய்தி வெளியிட்ட நேரத்தில் நீங்கள் பொசுக்கென்று மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்தது மக்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதையே தேர்தலில் காட்டிவிட்டனர் என்றார்களாம் நிர்வாகிகள்.
மாவட்ட செயலாளர்கள் கூறியதை எல்லாம் பொறுமையாக கேட்ட விஜயகாந்த், நீங்கள் விரும்பும் மாற்றம் ஏற்படும் என்று கூறியுள்ளாராம்.