சண்முகப் பாண்டியனைக் களம் இறக்க விஜயகாந்த்துக்கு தேமுதிக மா.செக்கள் ஐடியா!
சென்னை: தேமுதிகவை கூண்டோடு சாம்பலாக்கும் நோக்கில் அக்கட்சியினர் இருப்பதாக தெரிகிறது. விஜயகாந்த்தின் மகன் சண்முகப் பாண்டியனை கட்சிக்குள் கொண்டு வந்தால் மக்கள் மத்தியில் பாப்புலாரிட்டியை திரும்பப் பெறலாம் என்று கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் பலரும் விஜயகாந்த்துக்கு யோசனை கூறியுள்ளனராம்.
மேலும் மக்கள் நலக் கூட்டணியுடனான உறவை முதல் வேலையாக துண்டிக்க வேண்டும் என்று அனைவருமே விஜயகாந்த்தை வலியுறுத்தியுள்ளனராம். புதிய வலிமையான கூட்டணியை தேமுதிக அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனராம்.
உள்ளாட்சித் தேர்தலில் நாம் யார் என்பதை நிரூபிக்க வலிமையான பலமான கூட்டணி அவசியம் என்றும் அவர்கள் வலியுறுத்தினராம்.
மா.செக்களுடன் ஆலோசனை
தேமுதிகவின் படு தோல்விக்கான காரணம் குறித்து கட்சியின் நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்களுடன் நேற்று முதல் ஆலோசனை நடத்தி வருகிறார் விஜயகாந்த். கோயம்பேட்டில் வைத்து ஆலோசனை நடந்து வருகிறது. நாளை வரை இது தொடர்கிறது.
என்ன கேட்கிறார்?
இந்தக் கூட்டத்தில், 2006, 2011 சட்டசபை தேர்தல்களிலும், 2009, 2014 லோக்சபா தேர்தல்களிலும் சட்டசபை தொகுதி வாரியாக தேமுதிக பெற்ற வாக்குகள், தற்போது வாங்கியுள்ள வாக்குகள் குறித்து விஜயகாந்த் கேட்டறிந்தார்.
சரிவுக்கு என்ன காரணம்?
வாக்குகள் சரிந்ததற்கு என்ன காரணம்? தொகுதிகளில் என்னென்ன பிரச்சனைகள் உள்ளன. தொகுதி வாரியாக ரசிகர் மன்ற காலத்தில் இருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை, கடந்த 5 ஆண்டுகளில் உறுப்பினர் சேர்க்கை போன்ற விவரங்களை கேட்டறிகிறார்.
ஏன் குறைந்தது?
தேமுதிகவில் 54 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் கிடைத்த வாக்குகளோ வெறும் 10.34 லட்சம்தான். ஏன் இப்படி என்று கேட்கிறாராம் விஜயகாந்த்.
தொண்டர்களுக்கு உதவ வேண்டும், பழக வேண்டும்
திமுக, அதிமுக போல தேமுதிக தலைமை தொண்டர்களுடன் நெருங்கிய உறவைப் பேணுவதில்லை. அவர்களது குடும்ப நிகழ்ச்சிகளுக்கு உதவ வேண்டும். அவரக்ளுடன் நெருக்கமான உறவைப் பேண வேண்டும். அவர்களின் உழைப்பைப் பாராட்டி அங்கீகரிக்க வேண்டும் என்று விஜயகாந்த்திடம் நிர்வாகிகள் கூறினராம்.
விசாரணை இல்லாமல் நடவடிக்கை கூடாது
யார் மீதாவது புகார் வந்தால் எடுத்த எடுப்பிலேயே நடவடிக்கை எடுக்கக் கூடாது. சம்பந்தப்பட்டவர்களை அழைத்து விசாரித்த பின்னர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சண்முகப் பாண்டியன்
விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியனை கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட செய்ய வேண்டும். தொண்டர்களின் இல்ல நிகழ்ச்சிகளில் பங்கேற்க செய்ய வேண்டும். அப்போதுதான் கட்சிக்கு கூட்டம் சேர்க்க முடியும். கவனம் ஈர்க்க முடியும் என்றும் கூறினராம்.
வேண்டாம் மக்கள் நலக் கூட்டணி
நமக்குப் பெரும் பாதகத்தை ஏற்படுத்தியது மக்கள் நலக் கூட்டணிதான். எனவே அந்தக் கூட்டணியை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்று அனைவருமே கூறினராம்.
வலுவான கூட்டணி
வருகிற உள்ளாட்சித் தேர்தலில் வலுவான கூட்டணியை அமைக்க வேண்டும் என்றும் நம்மை நிரூபிக்க இது ஒரு நல்ல வாய்ப்பு என்றும் நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் விஜயகாந்த்திடம் கூறியுள்ளனராம்.
வேட்பாளர்களுடன் நாளை ஆலோசனை
இன்றோடு மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனையை முடித்துக் கொள்ளும் விஜயகாந்த், நாளை தேமுதிக சார்பில் போட்டியிட்டுத் தோற்ற அனைத்து வேட்பாளர்களையும் சந்தித்துப் பேசவுள்ளாராம்.