அப்பாடா ஜெயலலிதா இல்லை.. தைரியமாக தொடர் போராட்டங்களில் குதிக்கப் போகும் விஜயகாந்த்!
சென்னை: லோக்சபா தேர்தலில் பெற்ற மாபெரும் தோல்விக்குப் பின்னர் ஆள் அட்ரஸே இல்லாமல் போய் விட்டதே என்று பேசும் அளவுக்கு இருந்த தேமுதிக தற்போது திடீர் சுறுசுறுப்பைப் பெற்றுள்ளது.. எல்லாம் ஜெயலலிதா சிறைக்குப் போனதுதான் காரணம்!
ஜெயலிலதா சிறைக்குப் போவதற்கு முன்பு வரை உடல் நலக்குறைவை காரணம் காட்டி கட்சியினரை சந்திக்கக் கூட தயங்கி வந்தவரான விஜயகாந்த், தனது தெருவிலேயே குடியிருக்கும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தன்னை வந்து சந்திக்க விரும்பியபோது கூட முதலில் மறுத்த விஜயகாந்த், ஜெயலலிதா சிறைக்குப் போன அன்று காரை எடுத்துக் கொண்டு ஆளுநர் மாளிகை வரை வந்து விட்டுப் போனார்.
இந்த நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்த விஜயகாந்த் தயாராகி வருகிறாராம்.
மாற்று தலைவராக மாற முயற்சி
திமுக, அதிமுகவை விட்டால் அடுத்து நான்தான் என்று மக்கள் மனதில் பதிய வைக்க விரும்புகிறாராம் விஜயகாந்த்.
ஜெயலலிதா இல்லாததால்
தற்போது ஜெயலலிதா ஊரில் இல்லை என்பதால் இந்த நிலையை பயன்படுத்திக் கொண்டு மக்களுக்காக இருக்கும் ஒரே கட்சி நாங்கள்தான் என்று காட்டிக் கொள்ள பல்வேறு போராட்டங்களை கையில் எடுக்கப் போகிறதாம் தேமுதிக.
மின்வெட்டு- மின் கட்டண உயர்வு - பால் விலை உயர்வு
இதற்காக விஜயகாந்த் கட்சி தேடிப் பிடித்துள்ள பிரச்சினைகள் மின்வெட்டு, மின் கட்டண உயர்வு, தனியார் பால் விலை உயர்வு, ஆவின் பால் கலப்படப் பிரச்சினை ஆகியவைதான்.
மாவட்டந்தோறும்
முதல் கட்டமாக மாவட்டந்தோறும் பல்வேறு போராட்டங்களை தேமுதிக நடத்தப் போகிறதாம்.
அடுத்து மாநில அளவில்
அடுத்து மாநில அளவில், அதாவது சென்னையில் தனது தலைமையில் போராட்டம் நடத்தவும் விஜயகாந்த் திட்டமிட்டிருப்பதாக கூறுகிறார்கள் தேமுதிக தரப்பில்.
இப்பவாவது சுறுசுறுப்பு வந்துச்சே
பரவாயில்லை, இத்தனை காலமாக தேமுதிக செய்ய வேண்டிய வேலையை எல்லாம் திமுகதான் செய்து வந்தது. பொறுப்பான எதிர்க்கட்சியாக திமுகதான் செயல்பட்டு வந்தது. இப்பவாவது தேமுதிகவுக்கு சுறுசுறுப்பு வருதே. அந்த வகையில் ஜெயலலிதாவுக்கு நன்றி கூட சொல்லலாம் என்று சிரித்துக் கொள்கிறார்கள் அரசியலில் இருப்பவர்கள்.