எம்.எல்.ஏக்கள் சஸ்பென்ட்: "மவுன" பா.ஜ.க.வுக்கு ஏப்.5-ல் 'பொளேர்' பதிலடி- "கேப்டன்" முடிவு?
சென்னை: சட்டசபையில் தே.மு.க. தி.க. எம்.எல்.ஏ.க்கள் சஸ்பென்ட் செய்யப்பட்ட விவகாரத்தில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் தங்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் நிலையில் கூட்டணி கட்சியாக சொல்லுகிற பாரதிய ஜனதா மவுனமாக இருப்பது அக்கட்சித் தலைவர் விஜயகாந்த்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாம். ஏற்கெனவே பாரதிய ஜனதா மீது அதிருப்தியில் இருக்கும் விஜயகாந்த் அக்கட்சி தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகுவது குறித்த அறிவிப்பை ஏப்ரல் 5-ந் தேதி அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவடைந்த உடனேயே கூட்டணி கலகலத்தது.
அண்மையில் பா.ம.க.வும் இந்த கூட்டணியில் இருந்து விலகுவதற்கு முன்னோட்டமாக தமிழக சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளராக அன்புமணி அறிவிக்கப்பட்டார். பா.ம.க. தமது தலைமையிலேயே கூட்டணி என கூறி வருகிறது
தே.மு.க. விருப்பம்
இதேபோல் தே.மு.தி.க.வும் தங்கள் கட்சியை முன்னிலைப்படுத்தி சட்டசபை தேர்தலை சந்திப்பதில் உறுதியாக இருந்தது. இதை பாரதிய ஜனதா ஆதரிக்க வேண்டும் எனவும் அக்கட்சி விரும்புகிறது.
எம்.எல்.ஏக்கள் சஸ்பென்ட்
இந்த நிலையில் தமிழக சட்டசபையில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கு எதிராக தி.மு.க. உள்ளிட்ட மற்ற எதிர்க்கட்சிகளும் குரல் கொடுத்தன.
அண்மையில் கூட 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களை அடுத்த கூட்டத்தொடர் வரை சஸ்பென்ட் செய்து சபாநாயகர் அறிவித்துள்ளார். இதை கண்டித்து தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அந்த கட்சியினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட மற்ற எதிர்க்கட்சிகளும் தே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளன.
தி.மு.க. முழு ஆதரவு
தே.மு.தி.க, எம்.எல்.ஏக்களுக்கு சட்டசபையில் மட்டுமல்லாமல், வெளியிலும் தி.மு.க., ஆதரவாக பேசி வருகிறது. சட்டசபை வளாகத்தில் போராட்டம் நடத்திய தே.மு.தி.க. எம்.எல்.ஏக்களை மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
கருணாநிதி அறிக்கை
தி.மு.க.தலைவர் கருணாநிதியும் சட்டசபையில் தே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர்களுடைய தண்டனையை குறைக்க வேண்டும் என்பதை வற்புறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பாஜக மவுனம்
இப்படி எதிர்க்கட்சிகள் அனைத்தும் தே.மு.தி.க.வுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் பாரதிய ஜனதாவோ, இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த மவுனம் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை வருத்தமடைய வைத்திருக்கிறது.
மீண்டும் பழைய பல்லவி
இதனிடையே செய்தியாளர்களிடம் நேற்று பேசிய தமிழிசை சவுந்திரராஜன், தமிழக சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையில் கூட்டணி அமைக்கப்படும். இதில் ஊழல் இல்லாத கட்சிகள் சேரும் என்று கூறியுள்ளார். இதனால் விஜயகாந்த் மேலும் அதிர்ச்சி அடைந்திருக்கிறாராம்.
மெகா கூட்டணி
மறுபுறம் சட்டசபை தேர்தலில், தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கும் முயற்சி இப்போதே தொடங்கி விட்டது. இதில் தே.மு.தி.க. வையும் சேர்ப்பதற்காகவே தி.மு.க.வும், அதன் தலைமையும் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
அடம்பிடிக்கும் பாஜக
பாரதிய ஜனதா இதுவரை தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் மீதான நடவடிக்கை குறித்து வாய்திறக்கவில்லை. இப்போது தங்கள் தலைமையில் தான் சட்டசபை தேர்தலில் கூட்டணி என்றும் அறிவித்து இருக்கிறது.
பாமக
பா.ம.க. ஏற்கனவே தனி வழியில் போகத் தொடங்கி விட்டது. இதனால் தே.மு.தி.க. இப்போது தி.மு.க.வை நெருங்க தயாராவதாக சொல்லப்படுகிறது.
சேலத்தில் அறிவிப்பு?
வருகிற 5-ந் தேதி தே.மு.தி.க. மகளிர் அணி சார்பில் சேலத்தில் மாநில அளவில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தில் பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து விலகுவது குறித்த அறிவிப்பை விஜயகாந்த் வெளியிடக் கூடும் என தெரிகிறது.