விஜயகாந்த் இல்லாமல் தேமுதிக உண்ணாவிரதம்.. அமைச்சர்களை வார்த்தைகளால் வச்சு செய்த பேச்சாளர்கள்!!
சென்னை: கர்நாடக அரசை கண்டித்து சென்னையில் தேமுதிக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோயம்பேட்டில் கட்சி அலுவலகத்தில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்றுள்ளார். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் விஜயகாந்த் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாய சங்கங்கள், வணிகர் சங்கங்கள், லாரி உரிமையாளர் சங்கங்கள் ஆகியோர் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனத்.
இந்த முழு அடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதுடன், சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகம் முன் மாபெரும் கண்டன உண்ணாவிரதப் போராட்டம் தேமுதிக சார்பில் நடத்தப்படும் என்று விஜயகாந்த் அறிவித்தார். அதன்படி இன்று காலையில் தேமுதிக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது.
விஜயகாந்த் ஓய்பு
உண்ணாவிரதப் போராட்டத்தை தேமுதிக மகளிரணித்தலைவி பிரேமலதா தொடங்கிவைத்துப் பேசினார். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் விஜயகாந்த் ஓய்வெடுத்து வருவதாகவும், இதனால் உண்ணாவிரதப் போராட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்கவில்லை என்றும் கூறப்பட்டது.
குரல் கொடுத்த கேப்டன்
போராட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரேமலதா, தேசிய நதிகளை இணக்க வேண்டும் என்று கேப்டன் மட்டும் தான் வலியுறுத்தி வருகிறார். இந்த உறுதியில் இருந்து நாங்கள் விலக மாட்டோம். தமிழர்களுக்கு ஒன்று என்றால் முதல் குரல் கொடுப்பவர் கேப்டன்தான். காவிரி அநீதி, சந்தனக் கட்டை கடத்தலில் கைது செய்யப்படுபவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் கேப்டன்தான் குரல் கொடுக்கிறார் என்றார்.
அறப்போராட்டம்
இப்போதும் முதலில் அறப்போராட்டம் அறிவித்தார். அதற்குப் பின்னர்தான் பிற கட்சிகள் அறிவித்தனர். திமுகவும் நாங்களும் ஆதரவு கொடுப்போம் என்று அறிவித்தனர். தமிழ்நாடு முழுவதும் அறப்போராட்டம் நடத்தி வருகிறோம் என்று கூறினார் பிரேமலதா.
தேமுதிக நிர்வாகிகள் பேச்சு
இதனிடையே உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசிய தேமுதிகவினர், காவிரி பிரச்சினைக்கு சற்றும் சம்பந்தமில்லாத விசயங்களையே பேசினர். பிரேமலதா அண்ணியார் ராணி மங்கம்மாள் போன்றவர் அந்த அளவிற்கு தில் அவரிடம் இருக்கிறது என்று கூறினார் ஒரு தேமுதிக நிர்வாகி.
திமுக தலைவர் கருணாநிதி, முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றி பேசியதோடு, கேப்டன் விஜயகாந்தும், அண்ணியார் பிரேமலதாவும், திருக்குறள் போல ஒற்றுமையாக வாழ்கின்றனர் என்று கூறினார்.
மாஃபாவிற்கும் அர்ச்சனை
அதோடு மட்டுமல்லாது கல்வியமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பற்றியும், அவரது அமைச்சர் பதவி நிலையில்லாதது என்றும் கூறி தனது பேச்சை முடித்தார். ஆக மொத்தத்தில் இது காவிரிக்கான உண்ணாவிரதமா? அதிமுக அமைச்சர்களை திட்டுவதற்காக போடப்பட்ட மேடையா என்று பலரும் பேசிக்கொண்டனர்.