வாசன் - விஜயகாந்த்தை முன்வைத்து "ரூட்" போடும் இடதுசாரிகள்! கூட்டணிக்காக மல்லுகட்டும் தி.மு.க.
சென்னை: தமிழகத்தில் தி.மு.க., அண்ணா தி.மு.கவுக்கு மாற்றாக வலுவான ஒரு அணியை உருவாக்கியே தீருவது என கங்கணம் கட்டிக் கொண்டு இடதுசாரிகள் செயல்பட்டு வருகின்றனர்.. ஆனால் தி.மு.க.வோ இடதுசாரிகள் வியூகத்தை முறியடிக்க மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறது.
தமிழக சட்டசபைக்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம் என்று அண்ணா தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் லோக்சபா துணை சபாநாயகர் மு. தம்பித்துரை பேசப் போக. தமிழக அரசியல் களம் பரபரப்பானது..
அண்ணா தி.மு.க.வைப் பொறுத்தவரையில் தனித்தே களம் காண்பது என்பதுதான் முடிவாக இருக்கிறது. இருப்பினும் இந்த அணியில் இருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அண்மையில் வைகோ, திருமா ஆகியோரை இணைத்து போராட்டத்தை அறிவித்திருக்கிறார்.. நாம் முன்னரே பதிவு செய்தது போல அண்ணா தி.மு.க. அணியில் ஈழ ஆதரவு சக்திகளான வேல்முருகன், வைகோ, திருமா இணைவதற்கான சாத்தியங்கள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன.
தி.மு.க. வியூகம்
ஆனால் தி.மு.க. நிலைமையோ அடிப்ப அல்ல.. முடிந்த வரை எத்தனை கட்சிகளை இணைத்துக் கொள்ள முடியுமோ அத்தனை கட்சிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற வியூகம்தான்.... இதற்காக அத்தனை முயற்சிகளையும் பார்த்துவிடுவது என்ற முடிவில் இருக்கிறது தி.மு.க.
தே.மு.தி.க.வுடன் பேச்சுவார்த்தை
இதன் முதல் கட்டமாக தே.முதி.க.வுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாம் தி.மு.க. வழக்கம் போல மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீஷன் தலைமையிலான டீம்தான் இந்த பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.
கூடுதல் தொகுதி வேண்டுமே..
தே.மு.தி.க.வோ உடனே ஒப்புதல் தெரிவித்துவிடாமல் கடந்த தேர்தலில் அண்ணா தி.மு.க. 41 தொகுதிகள் கொடுத்ததே குறைவுதான்.. எங்களுக்கு அதை விட கூடுதல் தொகுதிகள் கொடுத்தாக வேண்டும் என்று கறாராகத்தான் பேசத் தொடங்கியுள்ளது.
ஜி.கே.வாசனையும் பிடிங்க..
அதேபோல் ஜி.கே.வாசனையும் விட்டுவிடக் கூடாது என்பதில் தி.மு.க. உறுதியாக இருக்கிறது. அண்மையில் சென்னையில் த.மா.கா. பிரமுகர் மரணமடைந்த போது அங்கு நேரில் சென்ற ஸ்டாலின், ஜி.கே.வாசனை சந்தித்து பேசியிருக்கிறார். தொடர்ந்தும் த.மா.கா.வுடன் நட்புக்கரம் நீட்டுவதில் உறுதியாக இருக்கிறது த.மா.கா.
இடதுசாரிகளின் மெகா கூட்டணி
ஆனால் இடதுசாரிகளோ ஜி.கே.வாசன் - விஜய்காந்த்தை முன்வைத்து மெகா கூட்டணிக்கு திட்டமிடுகிறார்க.. ஏற்கெனவே யெச்சூரி, வாசனை அவரது வீட்டிலேயே நேரில் சென்று சந்தித்துப் பேசியிருந்தார்.
வாசனுடன் ராஜா பேச்சு
இந்த நிலையில் கடந்த வாரம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி. ராஜா, வாசனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளார். இடதுசாரிகளைப் பொறுத்தவரையில் த.மா.கா., தே.மு.தி.க, ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் என தி.மு.க- அண்ணா தி.மு.க. அல்லாத அனனத்து கட்சிகளையும் முடிந்த அளவு ஓரணியில் திரட்டிவிடுவது என்ற முடிவில் களப்பணியாற்றி வருகிறது.
மெகா கூட்டணி அமைப்பது யார்?
இத்தனை களேபர கூட்டணி முயற்சிகளுக்கு மத்தியில் பா.ம.க. பல்வேறு சிறு ஜாதிய கட்சிகளை இணைத்துக் கொண்டு ஒரு கூட்டணிக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறது.
தற்போதைய நிலையில் மெகா கூட்டணி அமைக்கப் போவது தி.மு.கவா? இடதுசாரிகளா? என்ற கேள்விதான் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பான விவாதப் பொருளாகி இருக்கிறது.