மோடி மாதிரி கலர் சட்டை போட்டால் ஆட்சியை பிடிக்க முடியுமா?: ஸ்டாலினை கேட்கிறார் வைகோ!
கரூர்: வரும் 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நல கூட்டியக்கம் வென்று ஆட்சியைப் பிடிக்கும். அப்போது திமுக அதிமுகவினர் ஊழல் செய்து சேர்த்த சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மோடியை போல அடிக்கடி ஆடைகளை மாற்றி ஆட்சியை பிடிக்கலாம் என்று கனவு காண்பதாகவும் திமுக பொருளாளர் ஸ்டாலினை அவர் கிண்டலடித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மறுமலர்ச்சி பிரசார பயணம் மேற்கொண்டுள்ளார். கரூர் தான்தோன்றிமலையில் நகர கழகம் சார்பில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் ப்ளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா மற்றும் பிரசாரக் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற பேசிய வைகோ, திமுக, அதிமுக இரு கட்சிகளும் கமிஷனுக்காக ஆட்சியைப் பிடிக்க போராடுகிறார்கள். திமுக ஆட்சியில் 15 சதவீதமாக இருந்த கமிஷன் அதிமுக ஆட்சியில் 25 சதவீதமாக மாறியுள்ளது. அடுத்து 35 சதவீத கமிஷனுக்கு திமுக துடிக்கிறது என்றார்.
கலர் கலர் ஆடை
திமுக ஆட்சியில் எவரும் சொத்து வைத்திருக்க முடியவில்லை. இப்போது இனிமேல் தப்பு செய்ய மாட்டேன் என சொல்கிறார்கள். ஒருவர் புதுசா டீ குடிக்கிறார். ஆட்டோவில் ஒரு நிமிடம் பயணிக்கிறார். மோடியை போல அடிக்கடி ஆடைகளை மாற்றி ஆட்சியை பிடிக்கலாம் என யாரோ சொல்லி இருக்கிறார்கள்.
கையெழுத்து போட்டது ஏன்?
தமிழகத்தின் ஒரு பகுதியை பாழ்படுத்தும் மீத்தேன் திட்டத்தில் மு.க.ஸ்டாலின் எப்படி கையெழுத்திட்டார்? இதுபற்றி கேட்டால் கலைஞர் தெரியாமல் போட்டுவிட்டார் என்கிறார்.
மாற்றம் வரவேண்டும்
கொலை செய்துவிட்டு தெரியாமல் செய்தேன் என்றால் போலீஸ் விட்டு விடுமா? 65 சதவீத மக்கள் கட்சி சாராமல் இருக்கிறார்கள். அவர்கள் நினைத்தால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
ஊழல் சொத்துக்கள்
மக்கள் நல கூட்டியக்கம் ஆட்சிக்கு வந்தால் அதிமுக , திமுக ஆகிய இரு இயக்கங்களும் ஊழல் செய்து சேர்த்த சொத்துகளும் பறிமுதல் செய்யப்படும். அதைதான் நீதிபதி குன்ஹாவும் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
ஒளிமயமான எதிர்காலம்
கட்சியில் இருந்து சென்றவர்களுக்காக வருத்தப்படுகிறேன். என் மீது குற்றம் சாட்டினாலும் விமர்ச்சிக்க மாட்டேன். ஒளிமயமான எதிர்காலத்தை காண, அதில் பங்கெடுக்க முடியாமல் அவர்களை அவர்களே அழித்து கொண்டுவிட்டார்களே என கவலைப்படுகிறேன்" என்று கூறியுள்ளார் வைகோ.