மாட்டிறைச்சிக்கு தடைக்கு கண்டனம் - நாளை திமுக போராட்டம்!
நாடு முழுவதும் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதை கண்டித்து நாளை திமுக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.
சென்னை: மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை கண்டித்து நாளை சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.
இறைச்சிக்காக மாடுகள் விற்பனைக் கூடங்களுக்கு அழைத்து செல்லப்படுவற்கு மத்திய அரசு நாடு முழுவதும் தடை விதித்தது. இந்நிலையில் இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக, சென்னையில் மே 31ம் தேதி திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காலை 9 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக கூறியுள்ளது. சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் மௌனம்
மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் என்ற தலைபில் திமுக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அண்டை மாநிலங்களான கேரளா, புதுவை உள்ளிட்டவை இந்த விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தமிழக அரசு மௌனம் காப்பது ஏன் என்று திமுக கேள்வி எழுப்பியுள்ளது.
உரிமையில் தலையீடு
தனி மனித உணவு சம்பந்தமான விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டுள்ளது. நேற்று நடைபெற்ற மாட்டுச் சந்தைகளில் மாடுகள் விற்பனை செய்யப்படவில்ல என்று இதனால் விவசாயிகள் தற்கொலைகள் அதிகரிக்கும் என்று அறிக்கையில் கூறப்பட்டள்ளது.
இந்துத்துவா கொள்கை திணிப்பு
இந்நிலையில் மாநில அரசின் உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவது போல இந்தச் சட்டம் உள்ளதாக திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். மேலும் ரமலான் நோன்பு தொடங்கும் நேரத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு இந்துத்துவ கொள்கைளை பிரதிபலிப்பதாகத் தெரிவித்தார்.
போராட்டம் தொடரும்
மேலும் நாளை நடைபெறும் போராட்டம் தொடக்கம் தான். இது போன்ற போராட்டங்கள் மாநிலம் முழுவதும் நடத்தப்படும் என்றும் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.