மாணவர் முத்துக்கிருஷ்ணன் குடும்பத்துக்கு திமுக ரூ. 1 லட்சம் நிதியுதவி
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆய்வு படிப்பு படித்து வந்த தமிழக மாணவர் முத்துக்கிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டதற்கு இரங்கல் தெரிவித்த திமுக, அவரது குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதியுதவியை வழங்கியுள்ளத
சேலம்: டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் முத்துக்கிருஷ்ணன் தற்கொலையைத் தொடர்ந்து அவரது குடும்பத்துக்கு திமுக சார்பில் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
சேலம் சாமிநாதபுரத்தைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் (30). இவர் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நவீன வரலாற்றில் ஆய்வு பட்டம் படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று ஹோலி கொண்டாடுவதற்காக நண்பர்களின் அறைக்கு சென்ற அவர் ஓய்வெடுப்பதாகக் கூறி சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வெ்ளியே வராததால் சந்தேகம் அடைந்த மாணவர்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடம் விரைந்த போலீஸார் கதவை உடைத்து சென்று பார்த்தபோது முத்துக்கிருஷ்ணன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
டெல்லியில் தமிழக மாணவர் முத்துக்கிருஷ்ணன் உயிரிழந்த சம்பவம் அதிர்சத்சி அளிப்பதாக தெரிவித்த மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்திற்கு ஆழ்த்த இரங்கல் தெரிவித்துக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து சேலம் திமுக எம்எல்ஏ ராஜேந்திரன், முத்துக்கிருஷ்ணன் குடும்பத்தை நேரில் சந்தித்து திமுக சார்பில் ரூ. 1 லட்சம் நிதியுதவியை வழங்கினார்.