ராதாபுரம் அதிமுக வேட்பாளரை பதவியேற்க அனுமதிக்க கூடாது: லக்கானியிடம் திமுகவின் அப்பாவு மனு
சென்னை: நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் பதிவான அஞ்சல் வாக்குககளை மீண்டும் எண்ண வேண்டும். அதுவரை அதிமுகவின் இன்பதுரையை எம்எல்ஏ பதவியேற்க அனுமதிக்க கூடாது என தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் திமுக வேட்பாளர் அப்பாவு மனு அளித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட அப்பாவு வெறும் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அதிமுக வேட்பாளர் இன்பதுரை 69,590 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.அப்பாவு 69,541 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். மறு வாக்கு எண்ணிக்கை நடத்த கோரி போராட்டம் நடத்திய அப்பாவு, திமுக வாக்குகள் செல்லாதவை என நிராகரிக்கப்பட்டதாக அப்போது புகார் கூறியிருந்தார்.
இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் அப்பாவு அளித்துள்ள மனுவில், ராதாபுரம் தொகுதியில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் இன்பதுரை வெற்றி பெற்றார். அந்த தொகுதியில் எனக்கு ஆதரவாக 300 அஞ்சல் வாக்குகள் பதிவாகியிருந்தன. எனவே, அஞ்சல் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் கோரினேன்.
வெற்றி வித்தியாசம் அஞ்சல் வாக்குகளை விட குறைவாக இருந்தால் மீண்டும் அஞ்சல் வாக்குகளை எண்ண வேண்டும் என்பது விதி. எனவே, ராதாபுரம் தொகுதியில் அஞ்சல் வாக்குகளை எண்ண வேண்டும். அத்துடன். முடிவ தெரியும் வரை அதிமுகவில் வெற்றி பெற்ற இன்பதுரை எம்எல்ஏவாக பதவியேற்க அனுமதிக்க கூடாது என கூறியுள்ளார்.