ஆர்கே நகரில் நாடார் சமூக வாக்குகளை மலைபோல நம்பும் திமுக!
ஆர்கே நகர் தொகுதியில் நாடார் சமூக வாக்குகளை மலைபோல நம்பியுள்ளதாம் திமுக. இதற்காக நாடார் சமூக தலைவர்களுக்கும் வலைவிரித்துள்ளதாம் திமுக.
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியின் களநிலவரத்தால் கலவரமாகிப் போயுள்ள திமுக 40,000 நாடார் சமூக வாக்குகளை மலைபோல நம்பியுள்ளது. இந்த வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அறுவடை செய்தாக வேண்டிய கட்டாயத்தில் திமுக இருக்கிறது என்பதுதான் களத் தகவல்.
கடந்த சட்டசபை தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுகவில் ஜெயலலலிதாவும் திமுகவில் சிம்லா முத்துசோழனும் மோதினர். ஜெயலலிதா 97, 218 வாக்குகள் பெற்றார். சிம்லா முத்துச் சோழன் 57, 673 வாக்குகளைப் பெற்று தோல்வியைத் தழுவினார்.
தற்போது ஜெயலலிதா மறைவால் இடைத் தேர்தலை எதிர்கொண்டிருக்கிறது ஆர்.கே.நகர் தொகுதி. அத்துடன் அதிமுகவின் ஓட்டுகள் பல அணிகளாக சிதறிக் கிடக்கின்றன. இதனால் திமுக வெற்றி பெற்றாக வேண்டிய கடும் நெருக்கடியில் இருக்கிறது.
திமுகவுக்கு 2-வது இடம்
ஆர்.கே.நகர் களத்தைப் பொறுத்தவரையில் ஓபிஎஸ் அணிக்கு அதிக ஆதரவும் 2-வது இடம்தான் திமுகவுக்கு என்கிற நிலைமை காணப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் நேற்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
அலாரம் அடித்த சேகர் பாபு
அதில் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் பேசிய சேகர் பாபு, அதிமுகவின் சிதறப் போகும் வாக்குகள் நமக்கு வரப்போவது இல்லை. ஆனால் நம்முடைய திமுக வாக்குகள் சிதறிப் போய் விலைபோகாமல் இருக்க வேண்டியது முக்கியம் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
ஒரு ஓட்டாவது...
ஆர்.கே.நகரில் திமுக கடந்த முறை வாங்கிய 57, 673 வாக்குகளைவிட ஒரு வாக்கேனும் கூடுதலாக பெற்றாக வேண்டும். இந்த இடைத் தேர்தல் என்பது திமுக செயல் தலைவராகியுள்ள மு.க.ஸ்டாலின் எதிர்கொண்டிருக்கும் மிக முக்கியமான அக்னி பரீட்சை. அதுவும் திமுக வேட்பாளராக சாதாரண தொண்டரான பத்திரிகையாளரான மருது கணேஷ் நிறுத்தப்பட்டுள்ளார்.
நம்பிக்கை வரும்
இப்படி ஒரு சாதாரண தொண்டரை நிறுத்தி பணம் கொடுக்காமல் தேர்தலில் திமுக வென்றால் நிச்சயம் அது ஸ்டாலின் தலைமையை வலிமைப்படுத்தும். காலம் காலமாக குறுநில மன்னர்கள் ஆட்சி செலுத்தும் திமுகவில் தங்களுக்கும் ஒருவாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை தொண்டர்களுக்கும் உருவாகும்.
நாடார் வாக்குகள்
இந்த நிலையில் ஆர்கே நகரில் உள்ள 40,000 நாடார் சமூக வாக்குகளை மலைபோல நம்பியுள்ளது திமுக. இந்த வாக்குகள் கணிசமான கிடைத்தாலே திமுகவின் வெற்றி உறுதியாகிவிடும் என்பதால் அச்சமூக தலைவர்களுக்கு வலைவிரிக்கப்பட்டுள்ளதாம்.
ஈகோ பிரச்சனை
அதே நேரத்தில் திமுகவில் உயர்நிலையில் இருக்கும் நாடார் சமூகத்தினரை முன்னிலைப்படுத்தி வாக்கு சேகரிப்பதை ஈகோ பிரச்சனையாக பார்க்கிறதாம் ஸ்டாலின் தரப்பு. அந்த எளிதான வழியை கையிலெடுக்காமலேயே நாடார் சமூகத்தின் வாக்குகளை தங்கள் பக்கம் வளைத்துப் போட அனைத்துவித பிற வழிமுறைகளையும் கையிலெடுத்துள்ளதாம் ஸ்டாலின் தரப்பு.