பாஜக நடத்தும் ஜிஎஸ்டி விழா ஒரு வெற்று விளம்பரம்… காங்கிரசை தொடர்ந்து திமுகவும் புறக்கணிப்பு
நாளை இரவு நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ள ஜிஎஸ்டி அறிமுக விழாவில் பங்கேற்கவில்லை என்று திமுக அறிவித்துள்ளது
சென்னை: நாளை இரவு நாடாளுமன்றத்தில் ஜிஎஸ்டி அறிமுக விழா நடக்கிறது. இந்த விழாவை பாஜக நடத்தும் வெற்று விளம்பர விழா என்று கூறி திமுக புறக்கணித்துள்ளது.
நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை அமல்படுத்தும் விதமாக சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி வரி வருகிற 30ம் தேதி நள்ளிரவில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
நீண்ட கால இழுபறிக்கு பிறகு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டது.
அறிமுகம்
இதை தொடர்ந்து வருகிற 30ஆம் தேதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் ஜிஎஸ்டி கட்டாயம் அமலாகிறது என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்திருந்தார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
விழா
நாளை நள்ளிரவில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இதற்கான விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஜிஎஸ்டி அறிமுக விழாவில் ஜனாதிபதி பிரணாப், துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பிரதமர் மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், லோக்சபா தலைவர் சுமித்ரா மகாஜன் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
அழைப்பு
நாடாளுமன்றத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் அனைத்து எம்பிக்களும் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு பாஜக அரசு அழைப்பு விடுத்திருந்தது. பாஜக கூட்டணிக் கட்சிகள் இதில் பங்கேற்க உள்ளன.
திமுக புறக்கணிப்பு
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டோம் என்று திமுக அறிவித்துள்ளது. இதுகுறித்து திமுக ராஜ்ய சபா எம்பி டிகேஎஸ் இளங்கோவன், இது ஒரு வெற்று விளம்பர விழா என்று கருத்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் புறக்கணிப்பு
முன்னதாக, இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி கலந்து கொள்ளாது என்று அறிவித்தது. இதனைத் தொடர்ந்து திமுக புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மம்தா புறக்கணிப்பு
ஜிஎஸ்டி விழாவில் பங்கேற்கப் போவதில்லை என்று நேற்றே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்தார். ஜிஎஸ்டி அறிமுகம் மத்திய அரசின் மற்றொரு மிகப்பெரிய தவறாகும் என்றும் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.