வேன் பயண சிரமத்தை தவிர்க்க பிரசார நிகழ்ச்சிகளை மாற்றினார் கருணாநிதி!
சென்னை: வேனில் பயணம் செய்து பிரசாரம் செய்வது சிரமமாக இருப்பதாக கூறியுள்ள கருணாநிதி, பொதுக்கூட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், பிரசார பயணத்தை மாற்றியமைத்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
மே 16 அன்று நடைபெறவுள்ள தமிழகச் சட்டப் பேரவைத் தேர்தல் பிரசாரத்திற்காக என்னுடைய திருத்தப்பட்ட நிகழ்ச்சி நிரல் இன்று தலைமைக் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
முதலில் வெளியிடப்பட்ட சுற்றுப் பயண நிகழ்ச்சிகளில் விடுபட்டுப் போன மாவட்டங்களின் கழகச் செயலாளர்கள் சிலர், தங்கள் மாவட்டங்களில் பிரசாரப் பயணம் வேண்டும் என்று வற்புறுத்திக் கேட்டுக் கொண்டிருந்த நிலையில், முதலில் வெளியிடப்பட்ட நிகழ்ச்சிகளிலேயே ஒருசில மாவட்டங்கள் தற்போது விடப்பட்டுள்ளன. காரணம் என்னுடைய முதல் கட்ட ஆறு நாள் தொடர்ச்சியான சுற்றுப் பயண நிகழ்வுகளின் அனுபவம் தான்.
ஆறு நாட்களும், பிரசார ‘‘வேனில்'' தான் வாசம். ஆனால் அந்த வேன் ஒவ்வொரு ஊரிலும் மனித சமுத்திரத்திற்குள் ஒவ்வொரு ஊரிலும் புகுந்து ‘‘குறுகுறு நடந்து சிறு கரம் நீட்டி''த் தத்தித் தவழ்ந்து வரும் குழந்தையைப் போலவெளி வந்ததை நீ தொலைக்காட்சிகளில் பார்த்துக் களித்துப் பெருமிதம் அடைந்திருப்பாய்.
கழகப் பொருளாளர், தம்பி மு.க.ஸ்டாலின் தனது சுற்றுப் பயணத்தை மேலும் விரிவுபடுத்திக் கொள்வதாகவும், நான் அதிகம் சிரமப்படக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார். ஆர்வமும் அக்கறையும் கொண்ட உடன்பிறப்புகளின் ஆலோசனையின் பேரில் தற்போது எனது சுற்றுப் பயணம் ‘‘திருத்தப்பட்டு'' இந்த நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.
முதலில் வெளி வந்த சில ஊர்களின் பெயர்கள் தற்போது விடுபட்டுப் போயிருக்கலாம். வரவிருக்கின்ற பொதுத் தேர்தலில் கழகக் கூட்டணி வெற்றி பெற்ற பின்னர், தற்போது விடுபட்ட ஊர்களுக்கு உங்களுடைய வெற்றி மகிழ்வில் பங்கு கொள்ள நான் நிச்சயமாக நேரில் வருகை தருவேன் என்ற உறுதியினைத் தருகிறேன்.
உங்களில் நானும், என்னுள் நீங்களும் ஐக்கியமாகி இருக்கிறோம் என்ற உணர்வுடன், நான் வராததை வந்ததாகவே கருதி, கழகக் கூட்டணி வேட்பாளர்கள் இந்தத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியினை ஈட்டிட அனைவரும் உழைத்திட வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
கருணாநிதியின் புதிய சுற்றுப்பயண விவரம்:
மே 3ம் தேதி மாலை- மதுரை பொதுக்கூட்டம்.
5ம் தேதி மாலை- சென்னை பொதுக்கூட்டம்.
8ம் தேதி மாலை- தங்கசாலை மணிக்கூண்டு- பொதுக்கூட்டம்
11ம் தேதி-திருவாரூர் தொகுதி (வாக்காளர்கள் சந்திப்பு வேன் மூலம்)
14ம் தேதி பிற்பகல் 3 மணி-சென்னை சேப்பாக்கம் பொதுக் கூட்டம்.