16 வருடங்களுக்கு முன்பு சிறை வாசல் முன்பு தர்ணா செய்த கருணாநிதி எதற்காகத் தெரியுமா?
மேம்பால ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட போது மத்திய சிறைச்சாலை முன்பு திமுக தலைவர் கருணாநிதி போராட்டம் நடத்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி நினைவலைகளை ஏற்படுத்தி வருகிறது.
சென்னை : ஜூன் 29ம் தேதி நள்ளிரவு கைது செய்யப்பட்ட திமுக தலைவர் கருணாநிதியின் புகைப்படம் முகநூலில் வெளியிடப்பட்டு அதன் நினைவலைகள் பரவி வருகின்றன.
பல ஆண்டுகள் பழமையான சில காட்சிகள், வீடியோக்கள் இப்போதும் நம்மை அந்த கால கட்டத்திற்கு அழைத்துச்செல்லும். இன்றிலிருந்து 16 வருடங்களுக்கு முன்பு பயணித்தால், அப்போது நடந்த தமிழக அரசியல் வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு கைது சம்பவம் கண்முன்னால் வருகிறது இந்த காட்சியைப் பார்க்கும்போது.
2001 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் மேம்பால ஊழல் வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியை தமிழக காவல்துறை கைது செய்த சம்பவம் எந்த அரசியல் தொண்டர்களாலும் மறக்கமுடியாத ஒன்று. ஒரு தலைவரின் கைது மட்டும் செய்தியல்ல அவர் எப்படி கைது செய்யப்பட்டார் என்பதுதான் காலம் கடந்தும் நிற்கும் செய்தி.
நினைவூட்டல் புகைப்படம்
கடந்த 2001 ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி நள்ளிரவில் கருணாநிதி கைது செய்யப்பட்ட சம்பவத்தை பல திமுக தொண்டர்கள் சமூகவலைதளங்களில் நினைவு கூர்ந்துள்ளனர். 16 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகும் ஞாபகத்தில் வருவதற்கு கருணாநிதி கைது செய்யப்பட்ட முறையே காரணம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
லுங்கியுடன் கைது
சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த முத்துக்கருப்பன் தலைமையிலான காவல்படை கருணாநிதியின் வீட்டில் அதிகாலையில் நுழைந்து கைது செய்தது. அந்த நேரத்தில் போலீசாரை சற்றும் எதிர்பாராத கருணாநிதி முரசொலி மாறனுக்கு தொலைப்பேசியில் தகவல் தெரிவித்தார். இரவு உடையில் இருந்த கருணாநிதியை துணி மாற்றக்கூட அனுமதிக்கவில்லை காவல்துறை.
அலைகழிப்பு
அணிந்திருந்த லுங்கியுடனே கைது செய்யப்பட்ட கருணாநிதியை போலீசார் எங்கு அழைத்து செல்கின்றனர் என்பதே யாருக்கும் தெரியவில்லை. அப்போது ஓமந்தூரார் மாளிகைக்கு அருகில் இருந்த சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டதையறிந்து கனிமாழி, ராஜாத்தி அம்மாள் உள்ளிட்டோர் காரில் அங்கு ஓடிச் சென்றனர். அங்கிருந்து அவசரமாக வேப்பேரி அழைத்து செல்லப்பட்டார் கருணாநிதி, ஆனால் அதையும் போலீசார் வெளிப்படையாக செய்யவில்லை, முன்பக்கத்தில் பத்திரிக்கையாளர்களை அழைத்துவிட்டு பின்பக்கமாக வேறு காரில் கருணாநிதியை அழைத்து சென்று விட்டனர்.
போராட்டம்
பின்னர் வேப்பேரி காவல்நிலையம் அழைத்து வரப்படுவதாக கிடைத்த தகவல்படி கருணாநிதி குடும்பத்தார் அங்கு வந்தனர். அப்போது காவல்துறையினருடன் கருணாநிதி குடும்பத்தார் மல்லுக்கட்டு செய்தனர். எங்கே அழைத்து செல்கிறீர்கள் என்று கூறாமல் ஏன் அலைகழிக்கிறீர்கள் என்று கொந்தளித்தனர். பின்னர் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தப்பட்டு ஜூலை 10ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. சிறையில் அடைப்பதற்காக கருணாநிதி அழைத்து செல்லப்பட்ட போது சிறை வாசலிலேயே அமர்ந்து சுமார் 1 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டார்.
குவிந்த தொண்டர்கள்
கருணாநிதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தகவலை அறிந்த தொண்டர்கள் அப்போது சென்ட்ரல் அருகே இருந்த மத்திய சிறைச்சாலைக்கு அருகே கூடினர். அந்தப் பகுதியில் இருந்த மேம்பாலத்திற்கு மேல் இருந்தபடியே கருணாநிதியின் போராட்டத்தை பார்த்து கூக்குரலிட்டனர். இன்றும் அனைவரின் நினைவலைகளை விட்டு அகலாத அந்த சம்பவத்தை திமுக அபிமானிகள் புகைப்படங்களுடன் வெளியிட்டு நினைவுபடுத்தி வருகின்றனர்.
அனுதாபம்
கருணாநிதியின் நள்ளிரவு கைது சம்பவத்தை திரும்பத் திரும்ப காலை முதல் தொடர்ந்து போட்டுக் காட்டிய பெருமை அவர்களின் குடும்பத் தொலைக்காட்சிக்கு இருந்தது. கருணாநிதி கைதின் போது அவர் முதன்முதலில் அழைத்தது முரசொலிமாறனைத் தான். முரசொலி மாறன் அப்போது மத்திய அமைச்சராக இருந்தார். "அய்யோ கொல்றாங்களே, கொல்றாங்களே" என்ற கருணாநிதியின் கூக்குரல் சுப்ரபாதம் போல அவர்களின் குடும்பத் தொலைக்காட்சியில் போட்டுக் காட்டப்பட்டு மக்களின் அனுதாபத்தைப் பெற்றதை யாராலும் மறக்க முடியாது.