மு.க. அழகிரியை அலட்சியப்படுத்துங்கள்: கருணாநிதி
சென்னை: திமுகவுக்கும், அழகிரிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அவர் செய்து வரும் துரோகத்திற்கு என் பெயரைப் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ள, அவர், அழகிரியை அலட்சியப்படுத்துங்கள் என்று திமுகவினரை கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
திமுகவின் கட்டுப்பாட்டை மீறும் வகையில் நடந்து கொண்டதற்காக, கட்சியினால் ஏற்கனவே ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருக்கும் மு.க. அழகிரி, அவ்வப்போது கழகத்தின் வளர்ச்சியைக் கெடுக்கும் வகையிலும், கழகத்தின் எழுச்சியைக் குலைப்பதற்காகவும் வேண்டுமென்றே திட்டமிட்டு அறிக்கை வெளியிட்டும், பேட்டி கொடுத்தும் வருகிறார்.
அவருக்கும் திமுகவுக்கும் இடையே எந்தத் தொடர்பும் கிடையாது. இந்த நிலையில் திமுக - காங்கிரஸ் கட்சிக்கும் இடையே இந்தத் தேர்தலில் கூட்டணி ஏற்பட்டது குறித்து, இரண்டு கட்சிகளுக்கும் கொள்கையே இல்லை என்றும், அதிமுகவை எந்தக் கூட்டணியும் வெல்ல முடியாது என்றும் பேட்டி அளித்திருப்பதும் எவராலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.
மேலும், அவர் செய்து வரும் துரோகத்திற்கு என் பெயரைப் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது. திமுகவினர் யாரும் அவர் தெரிவித்து வரும் கருத்துக்களை பொருட்படுத்தத் தேவையில்லை. அவரையும், அவருடைய பேச்சுக்களையும் அலட்சியப்படுத்துங்கள் என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.
தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி தோல்வியடையும் கூட்டணி என்று அழகிரி தெரிவித்தார். இதனைக் கண்டிக்கும் வகையிலேயே இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார் மு.கருணாநிதி.