திமுக - காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது.. புதுவை முதல்வர் நாராயணசாமி
சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
டெல்லியில் இருந்து புதுவை வந்த முதல்வர் நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், உச்ச நீதிமன்றம் காவிரி பிரச்சினையில் தமிழகம், கர்நாடக, புதுவை ஆகிய மாநிலங்களின் வாதத்தை கேட்டுள்ளது. மத்திய தொழில்நுட்ப குழு அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையை பரிசீலினை செய்த பிறகு தமிழகத்துக்கு வினாடிக்கு 2,000 கனஅடி தண்ணீர் தர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
கர்நாடகா மாநிலம் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காதது வருத்தமளிக்கிறது. காவிரி பிரச்சினை பற்றி பேச பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு உள்ளேன். பதில் இன்னும் வரவில்லை. ஜனாதிபதியை சந்தித்து காவிரி பிரச்சினையில் தலையிட்டு தமிழகம், புதுவைக்கு இடைகாலத்தில் வழங்க வேண்டிய தண்ணீரையும் நிரந்தர தீர்வு ஏற்படுத்த கோரிக்கை வைத்து உள்ளேன். இது சம்பந்தமாக அரசிடம் பேசுவதாக அவர் கூறி உள்ளார்.
தமிழகம் மற்றும் புதுவையில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி பலமாக இருக்கிறது. நாங்கள் ஒருமித்த கருத்தோடுதான் செயல்படுகிறோம். தேர்தல் பிரசாரத்துக்கு ஏற்கனவே திமுக பொருளாளர் ஸ்டாலினை சந்தித்து அழைப்பு விடுத்துள்ளேன். அவரும் வருவதாக கூறியுள்ளார். மனு தாக்கல் செய்வதற்கு முன்பு தி.மு.க. தலைவர் கருணாநிதியையும் சந்திக்க உள்ளேன். இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.