மக்களால் நிராகரிக்கப்பட்ட திமுக-காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியால் பாதிப்பு இல்லை: தமிழிசை
சென்னை: ஏற்கனவே மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சிகளான திமுகவும், காங்கிரசும் கூட்டணி அமைத்துள்ளது தமிழக தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று பாஜக தமிழ் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
வரும் தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, திமுக-காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ள தகவல் வெளியானதும், நிருபர்களிடம் பேசிய தமிழிசை மேலும் கூறியதாவது: மத்தியில் கூட்டு ஆட்சி நடத்திய கட்சிகள் காங்கிரசும், திமுகவும். இவ்விரு கட்சிகளும் செய்த அராஜகங்களையடுத்து மக்களே அவர்களை வீட்டுக்கு விரட்டினர்.
ஊழல், 2ஜி, ஈழத்தமிழர் படுகொலைகள் போன்றவற்றில் இவ்விரு கட்சிகளும் எப்படி கை கோர்த்து செயல்பட்டன என்பதை மக்கள் மறக்கவில்லை. மக்களால் நிராகரிக்கப்பட்ட இவ்விரு கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளதால் எந்த தாக்கமும் ஏற்படப்போவதில்லை. தேர்தலில் அக்கூட்டணி பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது.
பாஜகவை பொறுத்தளவில் தனது கூட்டணி குறித்த முடிவை யோசித்துதான் எடுக்கும். காங்கிரஸ் கட்சி ஒரு கூட்டணியை அமைத்துவிட்டாதலேயே அவசரப்பட்டு பாஜக கூட்டணி அமைக்க தேவையில்லை. இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.