ஒரே கொசுத் தொல்லை.. திமுக கவுன்சிலர்கள்; அதெல்லாம் ஒரு கொசுவும் கிடையாது- சென்னை மேயர்!
சென்னை: சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் இன்று கொசுத் தொல்லையால் ஒரு வெளிநடப்பு நடந்தேறியது.. அதாவது கொசுத் தொல்லை பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட மோதலில் திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்புச் செய்து வெளியேறினர்.
சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் சைதை துரைசாமி தலைமையில் இன்று நடந்தது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக கவுன்சிலர்கள், சென்னை நகரில் கொசுத் தொல்லை அதிகரித்து விட்டதாகவும், கொசுக்களை ஒழிக்க மாநகராட்சி ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினர்.
கொசுத்தொல்லை காரணமாக மக்கள் பல்வேறு வியாதிகளால் அவதிப்படுவதாகவும் குற்றம் சாட்டினர். மேலும் இதுதொடர்பாக விவாதிக்கவும் அவர்கள் கோரினர்.
ஆனால் திமுகவினரின் கோரிக்கையை ஏற்க மறுத்த மேயர் சைதை துரைசாமி, சென்னை நகரில் கொசுத்தொல்லையே கிடையாது. கொசுக்கள் ஒழிக்கப்பட்டு விட்டதாக கூறினர். இதை எதிர்த்து திமுகவினர் ஒட்டுமொத்தமாக எழுந்து கோஷமிட்டனர். இதனால் கூட்டத்தில் அமளி துமளி ஏற்பட்டது. பின்னர் திமுக கவுன்சிலர்கள் அனைவரும் கூண்டோடு வெளி நடப்புச் செய்தனர்.
வெளிநடப்பு செய்த திமுக கவுன்சிலர்கள் பின்னர் மீண்டும் அவைக்கு வந்து கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கொசுவை ஒழிக்க நொச்சி செடி வளர்ப்பு
இந்த அமளி துமளிக்குப் பிறகு மேயர் சைதை துரைசாமி கொசு ஒழிப்பு தொடர்பான புதிய திட்டத்தை அறிவித்தார். அதை வெளியிட்டு அவர் பேசுகையில்,
சென்னையை கொசு இல்லாத நகரமாக உருவாக்க வேண்டும் என்பதில் ஜெயலலிதா தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அந்த அடிப்படையில் கொசுவை ஒழிக்க திடீர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கொசுவை ஒழிக்கும் வகையில் 15 லட்சம் நொச்சி செடிகள் நடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் இதுவரை 2 லட்சம் செடிகள் நடப்பட்டு உள்ளன.
ரசாயன மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத கொசுக்களை இயற்கையான முறையில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் வேப்ப எண்ணெய் மூலம் கொசுவை ஒழிக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். அதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இந்த புதிய முறை மூலம் கொசு உற்பத்தியை முற்றிலும் தடுக்க முடியும்.
நிலவேம்பு, பப்பாளி சாறு போன்ற இயற்கை முறையை பயன்படுத்தியதன் மூலம் டெங்கு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. படிப்படியாக குறைக்கப்பட்டு இப்போது டெங்கு இல்லாத நிலை உருவாகி உள்ளது.
ஒவ்வொரு மழைக்காலங்களிலும் வரும் நோய்கள் இப்போது குறைந்துள்ளன. சுகாதார துறையில் எடுக்கப்பட்ட மாற்றங்களால் நோய் குறைந்து இருக்கிறது.
கொசுவலை ஓராண்டுக்கு முன்பு கொடுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நொச்சி செடிகள் வழங்கி வருகிறோம். இப்படி மக்களை காப்பாற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கையின் மூலம் மலேரியா, டயரியா எந்த ஏரியாவிலும் இல்லை என்றார் அவர்.