சட்டசபை தேர்தலுக்கு 'மெகா கூட்டணி'... 'க்ரீன் சிக்னல்' காட்டிய தி.மு.க. மா.செ.க்கள்!!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்காக அனைத்து எதிர்க் கட்சிகளையும் உள்ளடக்கிய மெகா கூட்டணியை அமைக்க தி.மு.க.வின் மாவட்ட செயலாளர்கள் ஒருமனதாக ஆதரவு தெரிவித்துள்ளதாக அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. முதல்வராக மீண்டும் ஜெயலலிதா பொறுப்பேற்றுள்ள நிலையில் அண்ணா தி.மு.க.வுக்கு எதிராக மெகா கூட்டணியை அமைக்க வேண்டிய நெருக்கடியில் தி.மு.க. இருந்து வருகிறது.
அண்ணா அறிவாலயத்தில் தற்போது நடைபெற்று வரும் தி.மு.க மாவட்ட கழகச் செயலாளர்கள் கூட்டம்.
#DMK #Kalaignar #Karunanidhi pic.twitter.com/M0Ne7XapKI
— KalaignarKarunanidhi (@kalaignar89) May 25, 2015
இதற்காகவே தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இளைய மகன் தமிழரசுவின் மகன் அருள்நிதி திருமண பத்திரிகையை எடுத்துக் கொண்டு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்திருக்கிறார். தி.மு.க. அமைக்க இருக்கும் மெகா கூட்டணிக்கான முதல் படிக்கட்டாக இது கருதப்படுகிறது.
இதனிடையே மதுரையில் சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் கூடிய பிரமாண்ட தென்மண்டல தி.மு.க. கூட்டத்தை மு.க.ஸ்டாலின் நேற்று நடத்தி கட்சியின் வலிமையை வெளிப்படுத்தினார். இந்த நிலையில் சென்னையில் இன்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு கட்சித் தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் க.அன்பழகன் முன்னிலை வகித்தார்.
பொருளாளர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர்கள் வி.பி.துரைசாமி, ஐ.பெரியசாமி, சுப்புலெட்சுமி ஜெகதீசன், சற்குணபாண்டியன் உள்பட திமுகவின் 65 மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இன்றைய கூட்டத்தில் தேர்தல் நிதி வசூலிப்பு, மெகா கூட்டணி அமைப்பது, சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்வது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
இதில் கருத்து தெரிவித்த தி.மு.க மாவட்ட செயலாளர்கள் பலரும், அனைத்து அரசியல் கட்சிகளியும் ஒருங்கிணைத்து ஒரு மெகா கூட்டணி அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.