எடப்பாடி அரசு பெரும்பான்மையை இழந்தால் திமுக என்ன செய்யும்?.. தினகரன் என்னாவார்?
Recommended Video
சென்னை: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றால் எடப்பாடி அரசு பெரும்பான்மையை இழந்து கவிழும். அப்போது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் திமுக ஆட்சி அமைக்க முயற்சிக்குமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
ஓபிஎஸ் அணியை இணைத்ததற்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தினகரன் முகாமில் உள்ள 25 எம்.எல்.ஏக்களும் நாளை ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்க உள்ளனர்.
அப்போது எடப்பாடி அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம் தெரிவிக்க வாய்ப்புண்டு. அப்படி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆதரவை வாபஸ் பெறும் நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலைமை எடப்பாடி அரசுக்கு ஏற்படும்.
எடப்பாடி அரசு கவிழும்
தற்போதைய நிலையில் 135 எம்.எல்.ஏக்களைக் கொண்ட அதிமுகவில் எடப்பாடி தரப்பில் 110 பேர்தான் உள்ளனர். அதனால் பெரும்பான்மைக்கு தேவையான 117 எம்.எல்.ஏக்கள் இல்லாத நிலையில் எடப்பாடி அரசு கவிழும் சூழ்நிலை உருவாகும்.
சட்டசபை முடக்கம்
எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்காத நிலையில் சட்டசபையை ஆளுநர் முதலில் முடக்கி வைப்பார். அப்போது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் இணைந்து திமுக ஆட்சி அமைக்க முயற்சிக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
திமுகவும் தினகரனும்
திமுக, காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 98 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அதாவது திமுக- 89; இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்-1; காங்கிரஸ் 8 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
123 எம்.எல்.ஏக்கள்
தினகரன் முகாமில் 25 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். திமுக அணியும் தினகரன் தரப்பும் இணைந்தால் மொத்தம் 123 எம்.எல்.ஏக்கள். ஆக எளிதாக பெரும்பான்மையை நிரூபித்துவிட முடியும்.
தேர்தலை விரும்பும்?
அதேநேரத்தில் 8 எம்.எல்.ஏக்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சி முரண்டு பிடித்து பேரம் பேசும் சக்தியை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. இருப்பினும் திமுக ஆட்சி அமைக்க முயற்சிப்பதைவிட பொதுத்தேர்தலை சந்திக்கவே விரும்பும் என்றே கூறப்படுகிறது.