ஜெ. விமர்சன கட்டுரை- விகடனை பொதுமக்களுக்கு இலவசமாக கொடுத்த 2 திமுக நிர்வாகிகள் கைது
நெல்லை: ஜெயலலிதாவுக்கு எதிரான கட்டுரை இடம்பெற்ற ஆனந்த விகடன் வார இதழை பொதுமக்களுக்கு இலவசமாக கொடுத்து படிக்க சொன்னதற்காக நெல்லையில் 2 தி.மு.க. நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆனந்த விகடன் வார இதழில் தமிழக அரசு செய்தது என்ன என்ற விரிவான கட்டுரை ஒன்று கடந்த வாரம் வெளியாகி இருந்தது. அதில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் செயல்பாடுகள் மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தன.
இந்த ஆனந்த விகடன் வார இதழை தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் மொத்தமாக வாங்கி அவற்றை பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகித்து வருகின்றனர். இதனிடையே இந்த கட்டுரையை எடுத்து தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலியும் வெளியிட்டது.
இதைத் தொடர்ந்து முரசொலி ஆசிரியர் தி.மு.க. தலைவர் கருணாநிதி, செய்தி ஆசிரியர் செல்வம், ஆனந்த விகடன் ஆசிரியர் கண்ணன், பதிப்பாளர் மாதவன் ஆகியோர் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்தது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஆனந்த விகடனை விற்பனை செய்யக் கூடாது என ஏஜெண்டுகள், விற்பனையாளர்கள் மிரட்டப்படுவதாக அதன் ஆசிரியர் கண்ணன் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தார். இதனிடையே ஆனந்த விகடன் பத்திரிகையை பொதுமக்களிடம் இலவசமாக கொடுத்து படிக்க சொன்னதற்காக வள்ளியூர் நகர தி.மு.க. செயலாளர் சேதுராமன் மற்றும் நெல்லை மாவட்ட தி.மு.க இளைஞரணி துணை அமைப்பாளர் முத்துராமலிங்கம் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆனந்த விகடன் பத்திரிகையை படிப்பதற்காக பொதுமக்களிடம் கொடுத்த "குற்றத்துக்காக" 2 தி.மு.க. நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.