திமுக ஊராட்சி மன்ற தலைவரும், நான் தான் பாலா பட நடிகருமான அப்துல் ரஹ்மான் வெட்டிக் கொலை
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே திமுக ஊராட்சி மன்ற தலைவரும், நடிகருமான அப்துல் ரஹ்மான் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் அருகே இருக்கும் அப்துல்லாபுரத்தை அடுத்து உள்ள மோரணம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரஹ்மான்(38). திமுக சிறுபான்மை பிரிவு மாவட்ட துணை அமைப்பாளராகவும், அப்துல்லாபுரம் ஊராட்சி மன்ற தலைவராகவும் இருந்த அவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார்.
மேலும் அவர் பாசக்கார பசங்க, நான் தான் பாலா ஆகிய படங்களில் நடித்துள்ளார். செய்யாறு சிப்காட் தொழிற்சாலையில் இருந்து இரும்பு உதிரிபாகங்களை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார். இரும்பு விற்பனைக்காக அவர் திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் இருக்கும் புஞ்சை அரசந்தாங்கலில் குடோன் வைத்திருந்தார்.
நேற்று காலை அவர் குடோனில் இருந்தார். 20 பேர் அங்கு வேலை செய்து வருகிறார்கள். இந்நிலையில் இரு சக்கர வாகனங்களில் 4 பேர் குடோனுக்கு வந்து அப்துல் ரஹ்மானை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதை பார்த்து அலயறியடித்துக் கொண்டு ஓடி வந்த பெண் ஊழியர்களை அவர்கள் மிரட்டி ஒரு அறையில் வைத்து பூட்டிவிட்டு தப்பியோடினர்.
இந்நிலையில் தொழிலாளி ஒருவர் செல்போன் மூலம் ரஹ்மானின் மனைவி ஹபீபாவுக்கு தகவல் கொடுத்தார். உடனே ஹபீபா ஊர்க்காரர்களுடன் குடோனுக்கு வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தனது கணவரை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்வம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.