காவிரி.. அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட திமுகவுக்கு உரிமை இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
நாகர்கோவில்: காவிரி பிரச்சினைக்கு காரணமான திமுகவுக்கு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுவதற்கு தார்மீக உரிமை இல்லை என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நாகர்கோவிலில் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் பெற்று விரைவில் பணிக்கு திரும்ப வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன். தமிழ்நாட்டில் வெடி விபத்துகள் அதிகரித்து வருகின்றன. சிவகாசியில் நேரிட்ட விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளனர்.
இது போன்ற விபத்துகள் நேரிடாமல் இருக்க பட்டாசு ஆலை உரிமையாளர்கள், தொழிலாளர்கள், நகராட்சி அலுவலர்கள், தீயணைப்புத்துறை வல்லுநர்கள் ஆகியோர் இணைந்து ஆலோசித்து உரிய முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
காவிரி பிரச்னையில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுவதற்கு திமுகவுக்கு எந்த வித தார்மீக உரிமையும் இல்லை, காவிரி பிரச்னை இவ்வளவு சிக்கலானதற்கு காரணமே தமிழகத்தில் ஆட்சி புரிந்த திமுகவும், மத்தியிலும், கர்நாடக மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த காங்கிரசும்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. இப்பிரச்சினை குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
தமிழகத்தில் 3 தொகுதிகளுக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடும், வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள், இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் நிலை உருவாகக் கூடாது, குற்றச்சாட்டுக்குள்ளான வேட்பாளர்களுக்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளித்திருப்பதை ஏற்க முடியவில்லை என்றார்.