10,000 முழுநேர ஊழியர்களைக் கொண்டு 'தீயா' வேலை செய்யப் போகுது பாஜக... சொல்கிறார் தமிழிசை- வீடியோ
தமிழகத்தை தங்கள் பக்கம் திருப்ப 10,000 முழு நேர ஊழியர்களைக் கொண்டு பாஜக செயல்படும் என அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரை: தமிழகத்தை 3 மாதங்களில் தங்கள் பக்கம் திருப்புவோம்; 10,000 முழு நேர ஊழியர்களைக் கொண்டு தீவிரமாக செயல்படுவோம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடத்தில் கூறியதாவது: தமிழகத்தில் 100 கோடிக்கும் மேல் மதிப்புள்ள போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. சிறுவர்கள் உண்ணும் சாக்லேட்டில் போதைப் பொருள் கலக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் மக்கள் போதைக்கு அடிமையாகி வருவதைக் காட்டுகிறது.
புழல் சிறையில் பாகிஸ்தான் கொடி உள்ளே எறியப்பட்டுள்ளது. அனைத்து பாதுகாப்புகளையும் மீறி அந்தக் கொடி சிறைக்குள் எப்படி வந்தது. மதுரையில் பிரதமர் மோடியின் மூன்றாண்டுகால சாதனை விளக்கக் கூட்டத்தில் மோடியின் உருவப்படம் கிழிக்கப்பட்டுள்ளது. பாஜக கட்சி கொடிக் கம்பம் வீழ்த்தப்பட்டுள்ளது. பாஜக பிரமுகரின் கார் எரிக்கப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றையும் காவல் நிலையத்தில் புகாராகக் கொடுத்துள்ளோம். மதுரை காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரு சிடி... பல நாள் வெளி நடப்பு
தமிழக அரசு, சட்டம் ஒழுங்கை சீர்குலையாமல் பாதுகாக்க வேண்டிய நிலையில் உள்ளது. தமிழகத்தில் ஆளும் கட்சி நிலைதான் இப்படி உள்ளது என்றால், எதிர்க்கட்சி, ஒரு சிறந்த எதிர்க்கட்சியாகவே செயல்படவில்லை. ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கிறேன் எனச் சொல்லி, ஒரு சிடியை வைத்துக்கொண்டு தினம் சட்டசபையில் வெளிநடப்பு செய்துகொண்டுள்ளார்கள்.
ஆளுநர் நடவடிக்கை எடுப்பார்
அந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்துகொண்டு இருக்கும்போது, உடனே விசாரித்து ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று சொல்வது எப்படி நியாயம் ஆகும்? ஊழல் நிரூபிக்கப்பட்டால் ஆட்சி தொடர்வதில் நியாயமில்லை. ஆனால் ஊழல் குறித்து குற்றம்சாட்டுவதற்கு தகுதியும் உரிமையும் இருக்க வேண்டும்.
திமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை
ஆனால்,திராவிட முன்னேற்ற கழகத்துக்கு ஊழல்,முறைகேடுகள் குறித்துப் பேசுவதற்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. ஊழல்வாதிகளே ஊழலைப் பற்றி எப்படி பேச முடிகிறது? ஊழல் நடந்திருந்தால், நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக ஆளுநர் ஊழலை ஒப்புக்கொள்ளக் கூடியவர் இல்லை. ஆகையால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
பாஜகதான் மாற்று
இன்றைய காலகட்டத்தில் தமிழகத்தில் மாற்றுசக்தி என்றால் அது பாரதிய ஜனதா கட்சிதான். மூன்றே மாதங்களில் தமிழகத்தை பாஜக பக்கம் திரும்ப வைப்போம்.
முதலில் ரஜினி அரசியலுக்கு வரட்டும்
ரஜினியை விவசாய சங்கித்தினர் சந்தித்தது குறித்து எனக்குத் தெரியாது. ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும். அதுவரை நாம் ஆருடம் சொல்லிக்கொண்டிருக்கக் கூடாது. ரஜினி முதலில் அரசியலுக்கு வரட்டும்.அரசியல் கட்சிகளை எதிர்கொள்ளட்டும். மக்களுக்கு நல்லது செய்யட்டும். அதை நாம் வரவேற்போம்.
ஆட்சி கலைப்பு?
ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் பாஜக தமிழக ஆட்சியை கலைக்கும் என ஊடகங்கள் கூறிக்கொண்டிருப்பது தவறு. பாஜக தமிழகத்தில் 10,000 முழுநேர ஊழியர்களைக் கொண்டு வேலை செய்யவுள்ளது. கட்சியை பலப்படுத்தி தான் ஆட்சிக்கு வருவோம். ஆனால் ஆட்சியைக் கலைக்கும் எண்ணமில்லை. - இவ்வாறு தமிழிசை கூறினார்.