முரசொலி பவள விழாவுக்கு வாங்க... ரஜினி, கமலுக்கு திமுக அழைப்பு!
முரசொலி பவள விழா நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.
சென்னை : முரசொலி பவள விழா கொண்டாட்டத்தில் பங்கேற்க நடிகர்கள் ரஜினி, கமலுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் பவளவிழாவை சிறப்பாகக் கொண்டாட அந்தக் கட்சி முடிவு செய்துள்ளது. முரசொலி பவள விழா நிகழ்ச்சியானது, ஆகஸ்ட் 10 மற்றும் 11ம் தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். முன்னணி நடிகர்கள் இருவரும் அரசியல் குறித்து பேசி வரும் நிலையில் அவர்களுக்கு திமுக நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
போருக்குத் தயாராக இருங்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் பேசும் போது சிஸ்டம் சரியில்லை என்று சொன்ன போது கூட ஸ்டாலின் நல்ல அரசியல் தலைவர் என்று கூறியிருந்தார். இதே போன்று நடிகர் கமல்ஹாசன் அரசின் எல்லாத்துறைகளிலும் ஊழல் உள்ளதாகக் கூறிய போது, அமைச்சர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.
அப்போதும் கமலின் பேச்சுக்கு அமைச்சர்கள் எச்சரிக்கை விடுப்பது ஜனநாயக உரிமைகளுக்கு எதிரானது என்று கூறியிருந்தார் ஸ்டாலின். அதற்கு நன்றி கூறியிருந்தார் கமல்ஹாசன். இந்நிலையில் அரசியல் பரபரப்பு பேச்சுகளுக்கு மத்தியில் இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டள்ளது. இவர்களில் நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இசைவு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.