பட்ஜெட் உரையில் சின்னம்மா புராணம்.. தண்டனை கைதி பெயரை சட்டசபையில் உச்சரிக்க திமுக கடும் எதிர்ப்பு
சிகலா பெயரை குறிப்பிட்டதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். ஜெயக்குமார் பேசியதே புரியாத அளவுக்கு திமுக கோஷம் இருந்தது.
சென்னை: 2017-18 நிதியாண்டு பட்ஜெட்டின்போது அமைச்சர் ஜெயக்குமார் ஆரம்பத்திலேயே அம்மா புகழ் பாடினார். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ள நிலையில் அதுகுறித்து விசாரிக்காத அரசின் அங்கமாக உள்ள ஜெயக்குமார், அம்மா புகழ் பாடியது ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலை மனதில் வைத்துதான் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
ஜெயக்குமார் பேசுகையில், கருணையின் வடிவம் நம் அம்மா, கடையேழு வள்ளல்களில் ஒருங்கிணைந்த திருவுருவம் அம்மா,
நானிருக்கும் வரை ஆதரவற்றோர் யாருமில்லை என்றவர் அம்மா, நீங்கள் மக்களோடுதான் இருக்கின்றீர்கள் தாயே, தாய்சேய் நல பெட்டகமாய், கிராமப்புறங்களை செப்பனிட்டு, அம்மா மருந்தகமாய், எல்லோரும் எல்லாம் பெற்றிட வேண்டும் என பசுமைவீடாய்,
ஏழை எளிய பெண்கள் தாலியில் தங்கமாய், இலவச மின்சார திட்டமாய், வறியோருக்கு உதவும் மாத ஓய்வூதியமாய், ஏழைகள் வீட்டில் எல்லா நல திட்டமாய், ஏங்கும் மக்களின் ஏற்றமிகு நல்வாழ்வாய் நாங்கள் உங்களை பார்த்துக்கொண்டிருக்கிறோம் அம்மா.
நீங்கள் எப்போதும் எங்களோடு இருக்கிறீர்கள் உள்ளீர்கள் அம்மா, நீங்கள்தானம்மா எங்கள் வாழ்க்கை, அலையோடு நுரைபோல, நிலவோடு குளிர்போல, இறையோடு அருள்போல, ஒருநாள் ஒரு பொழுதும், நாடித்துடிப்பாய், விளங்கிக்கொண்டிருக்கும் எங்கள் மாண்புமிகு அம்மாவே, ஒவ்வொரு சொல்லுக்கும் பொருளும் நீங்கள்தான்.
மரியாதைக்குறிய பொதுச்செயலாளர் சின்னம்மாவுக்கும், துணை பொதுச்செயலலாளர் டி.டி.வி.தினகரனுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு ஜெயக்குமார் கூறினார். உடனே சசிகலா பெயரை குறிப்பிட்டதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். ஜெயக்குமார் பேசியதே புரியாத அளவுக்கு திமுக கோஷம் இருந்தது.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையிலுள்ள சசிகலா பெயரை, சட்டசபையில் வைத்து பேசி களங்கம் விளைவிக்கப்பட்டுவிட்டதாக திமுக குற்றம்சாட்டியது.