திமுகவில் ஐடி அணி உதயம் - செயலாளர் ஆனார் பி.டி.ஆர்.பி.தியாகராஜன்
தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராக பி.டி.ஆர்.பி.தியாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: திமுகவும் காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப அணியை உருவாக்கி அந்த அணியின் செயலாளராக பிடிஆர்பி தியாகராஜனை நியமனம் செய்துள்ளனர். இதற்கான உத்தரவை பொதுச்செயலாளர் அன்பழகன் பிறப்பித்துள்ளார்.
பேராசிரியர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
திமுகவின் கொள்கை, செயல்பாடுகளை காலத்துக்கேற்ப மக்களிடம் கொண்டு செல்ல தகவல் தொழில்நுட்ப அணி உருவாக்கபட்டுள்ளது.
முனைவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இந்த அணியின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பி டெக், எம்எஸ், எம்பிஏ படித்துள்ள தியாகராஜன், தற்போது எம்எல்ஏவாக உள்ளார்.
கடந்த 2014 லோக்சபா தேர்தல், 2016 சட்டசபை தேர்தலின் போது அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி ஆற்றிய பங்கின் காரணமாக அக்கட்சி அபார வெற்றி பெற்றது.
இரண்டு தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்த திமுக தற்போது புதியதாக தகவல் தொழில் நுட்ப அணியை உருவாக்கியுள்ளது.
திமுகவினர் ஏராளமானோர் முகநூல், டுவிட்டரில் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இவர்களின் கருத்துக்களுக்கு கடிவாளம் போடும் வகையிலும் இந்த அணியை உருவாக்கியுள்ளது திமுக. இளம் தலைமுறையினரை கவருமா திமுக தகவல் தொழில் நுட்ப அணி.