சட்டசபை தேர்தல்.. காங்கிரசுக்கு 'கரம் நீட்டும்' திமுக! 'டோர்னியர்' விஜயகாந்த் சிக்னல் கொடுப்பாரா?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் கூட்டணிகள் உதயமாகத் தொடங்கி உள்ளன. அண்ணா திமுகவுக்கு முடிவுகட்ட காங்கிரஸுடன் கை கோர்ப்போம் என்று அக்கட்சிப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாக கருத்து தெரிவித்திருப்பது புதிய கூட்டணி உருவாகிறது என்பதையே பிரதிபலிக்கிறது.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. பொதுவாக தமிழக சட்டசபை தேர்தலில் திமுக மற்றும் அண்ணா திமுக தலைமையில் கூட்டணிகள் அமைவது வழக்கம்.
அவ்வப்போது ஒருசில கட்சிகள் இணைந்து மூன்றாவது அணியை உருவாக்கி தேர்தல் களத்தை சந்தித்துள்ளன. அது தமிழக தேர்தல் களத்தை பாதித்ததாக இல்லை. அதே நேரத்தில் கடந்த லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையில் தேமுதிக, பாமக, மதிமுக என பிரதான எதிர்க்கட்சிகள் மூன்றாவது அணியாக களமிறங்கின.
ஆனால் திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்தே தேர்தலை சந்தித்தன. இந்த நிலையில்தான் தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது.
அதிமுக- பாஜக கூட்டணி
வரப்போகும் சட்டசபை தேர்தலைப் பொறுத்தவரையில் அண்ணா திமுக- பாரதிய ஜனதா கட்சிகள் இடையே கூட்டணி அமைவதற்கே அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. தமிழக அரசை தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்... ஆனால் அதே கட்சியின் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனனோ புகழாரம் சூட்டுகிறார்.
'உள்ளேன் அம்மா'
டெல்லியில் இருந்து தமிழகம் வரும் மூத்த மத்திய அமைச்சர்களும் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்துக்கு போய் 'உள்ளேன் அம்மா' அட்டெண்டென்ஸ் போட்டு வருகிறார்கள்.. ஜெயலலிதா மீதான வருமான வரித்துறை வழக்கு கூட அவருக்கு சாதகமாகவே முடித்து வைக்கப்பட்டது. தற்போது சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதாக தீர்ப்பளிக்கப்பட்ட உடனேயே பிரதமர் முதல் மத்திய அமைச்சர்கள் வரை பலரும் வரிந்து கட்டிக் கொண்டு ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ராஜ்யசபாவில்..
அண்ணா திமுகவுடன் இப்படி நெருக்கமாக இருந்தால்தான் ராஜ்யசபாவில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற முடியும் என்ற நெருக்கடியிலும் பாரதிய ஜனதா இருக்கிறது. இதனால் அதிமுகவை ஒருபோதும் பாஜக கைவிட்டுவிடாது.
திமுக வலைவீச்சு
இந்தப் போக்குகளால் தமிழக சட்டசபை தேர்தலில் அண்ணா திமுக- பாரதிய ஜனதா கட்சிகள் இடையே கூட்டணி உருவாவது உறுதி என்றே கூறப்படுகிறது. இதனை உணர்ந்துதான் 'முடிந்த மட்டும்' அனைத்து எதிர்க்கட்சிகளையும் வளைத்துவிடுவது என்ற கோதாவில் திமுகவும் இறங்கியிருக்கிறது.
சிக்கிய மதிமுக
இந்த வியூகத்தின் அடிப்படையில்தான் தமது சகோதரர் வீட்டு திருமணத்தை முன்வைத்து எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரையும் நேரில் சந்தித்து பேசினார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.. இதன் பின்னர் மதிமுக பொதுச்செயலர் வைகோ, திமுக அணியில் இடம்பெறுவதை உறுதி செய்யும் வகையில் தொடர்ந்து பேசி வருகிறார். தமது கட்சி நிர்வாகிகளிடத்தில் வெளிப்படையாகவே திமுக கூட்டணியில் இணையப் போவதாக கூறியிருக்கிறார்.
டோர்னியர் விஜயகாந்த்
அதே நேரத்தில் விஜயகாந்தைப் பொறுத்தவரை, மாயமான டோர்னியர் விமானத்தைப் போல அவ்வப்போது பாரதிய ஜனதா மற்றும் திமுக பக்கம் சிக்னல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.. இதனால் தற்போது விஜயகாந்தை ஓரம் கட்டி வைத்துவிட்டு காங்கிரஸ் பக்கம் தமது கவனத்தை திமுக திருப்பி இருக்கிறது.
அப்பாடா... பெருமூச்சில் காங்கிரஸ்
இதனால்தான் காங்கிரஸுடன் கரம் கோர்க்க தயார் என்று பகிரங்கமாகவே மு.க.ஸ்டாலின் அழைப்பும் விடுத்துள்ளார். காங்கிரஸைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் மரண அடி வாங்கிய பின்பும், திரைப்படங்களில் வடிவேலு பலமாக அடிவாங்கிவிட்டு வியாக்யானம் சொல்வதைப் போல சமாளித்துக் கொண்டிருக்கிறது. தற்போது திமுக நீட்டியிருக்கும் நேசக்கரத்தை கைப்பற்றினால்தான் 'உயிர் மூச்சு' கிடைக்கும் என்ற நிலையில் இருக்கிறது காங்கிரஸ்.
ஓடிவருவார் கேப்டன்
இப்படி மதிமுக, காங்கிரஸ் என ஒவ்வொரு கட்சிகளாக திமுக அணியில் இணையும் போது தனித்து விடப்படுகிற விஜயகாந்த் எப்படியும் 'ஓடி வருவார்' என நம்பிக்கையோடும் ஒருபக்கம் காத்திருக்கிறது திமுக..
லோக்சபா தேர்தலிலும் இதேபோல ஒரு வியூகத்தை வகுத்து தோல்வியைச் சந்தித்தவர் ஸ்டாலின்.. சட்டசபை தேர்தலுக்கான இந்த வியூகமாவது அவருக்கு கை கொடுக்குமா? என பொறுத்திருந்து பார்ப்போம்..