சட்டசபையில் ஜெ.அன்பழகன் அமளி வெளியேற்றம் - திமுக வெளிநடப்பு
தமிழக சட்டசபையில் இருந்து திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் வெளியேற்றப்பட்டார். இதனைக் கண்டித்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
சென்னை: தமிழக சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் வெளியேற்றப்பட்டார். இதனைக் கண்டித்து திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக மீனவர் விவகாரம் தொடர்பாக இன்று சட்டசபையில் விவாதம் நடைபெற்றது. அப்போது, அமைச்சர் ஜெயக்குமார் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்எல்ஏ அன்பழகன் அமளியில் ஈடுபட்டார்.
அவரை அமைதியாக இருக்குமாறு துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார். ஆனால் அதையும் மீறி அவர் அமளியில் ஈடுபடவே உடனடியாக சட்டசபையில் இருந்து வெளியேற்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உத்தரவிட்டார்.
இந்நிலையில், வெளியேற்றம் தொடர்பாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் சட்டசபையில் பேசினார். பலமுறை எச்சரித்தும் அமளியில் ஈடுபட்டதால், ஜெ.அன்பழகன் வெளியேற்றப்பட்டதாகவும், இன்று ஒரு நாள் மட்டும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
ஜெ.அன்பழகன் வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் துரைமுருகன் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.
வெளி நடப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், திமுக உறுப்பினர்கள் திட்டமிட்டு வெளியேற்றுவதாக குற்றம் சாட்டினார்.