குட்கா விற்பனைக்கு லஞ்சம்.. சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்காத முதல்வர்.. சட்டசபையில் திமுக வெளிநடப்பு
சென்னை: குட்கா விவகாரத்தில் தமிழக முதல்வரின் பதில் திருப்தியளிக்கவில்லை என்று கூறி மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் சட்டசபையில் வெளிநடப்பு செய்தனர்.
தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்வதற்காக, வணிகர்களிடம் லஞ்சம் பெற்று தமிழக அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளனர் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
நேற்று இப்பிரச்சினையை சட்டசபையில் கிளப்பினேன். ஆனால், ஆதாரம் இல்லாமல் பேச முடியாது என சபாநாயகர் கூறினார். எனவே ஆதாரங்களை திரட்டி சபாநாயகரிடம் கொடுத்தேன். அதையடுத்து இன்று, சிறிது நேரம் பேச அனுமதி அளித்தார். எனவே நான் சில ஆதாரங்களுடன் பேசினேன். இதுமுறையான விசாரணையாகவும், நியாயமான விசாரணையாகவும் அமைய வேண்டும் என்றால், சம்மந்தப்பட்டுள்ள மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரை பதவியிலிருந்து நீக்க வேண்டும். கமிஷனர் ஜார்ஜ், ராஜேந்திரன் ஆகிய உயர் போலீஸ் அதிகாரிகளை பதவியிலிருந்து நீக்க வேண்டும். அப்படி செய்தால்தான் முறையான விசாரணை நடைபெறும் என நான் எடுத்துக்கூறினேன்.
முதல்வர் பதில் உரையளிக்கும்போது, குற்றச்சாட்டுகளுக்கு துளியளவுக்கும் பதில் தராமல், பொத்தாம் பொதுவாக பதில் கூறினார். சென்னை கமிஷனராக இருந்த ஜார்ஜ், குட்காவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
22-12-16ல் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார் என்று முதல்வர் பதில் அளித்துள்ளார். ஆனால் அதற்கு முந்தைய நாள், அதாவது 21ம் தேதி அப்போதைய தலைமைச் செயலர் ராம்மோகன் ராவ் வீட்டில் சிபிஐ ரெய்டு நடத்தியிருந்தது. எனவே பதறியடித்து ஜார்ஜ் கடிதம் எழுதினார்.
இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இதற்கெல்லாம் முதல்வர் உரிய பதில் தரவில்லை என்பதால் வெளிநடப்பு செய்துள்ளோம். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.