நிறைவேறும் நீண்டகால எதிர்பார்ப்பு.. ராஜ்யசபா எம்.பி.யாகும் ஆலந்தூர் பாரதி
சென்னை: திமுகவின் சீனியர்களில் நீண்டகாலம் பதவி கிடைக்காமல் ஏமாற்றங்களையே சந்தித்து வந்தவர் ஆலந்தூர் பாரதி. இந்த நீண்ட காத்திருப்புக்குப் பலனாக தற்போது ராஜ்யசபா எம்.பி.யாகிறார் ஆலந்தூர் பாரதி.
தி.மு.க வின் மாணவர் அணியில் இருந்து அரசியலில் தொடருபவர் ஆலந்தூர் பாரதி. எம்.ஜி.ஆர். திமுகவில் இருந்த போது அவருக்காக தீவிர பிரசாரம் செய்தார்.
இருப்பினும் எம்.ஜி.ஆர். அதிமுகவை தொடங்கிய போது திமுகவிலேயே தொடர்ந்தார் ஆலந்தூர் பாரதி. திமுகவின் மாணவர் அணி, சட்டத்துறை செயலராக அவர் பதவி வகித்திருக்கிறார். தற்போது திமுகவின் அமைப்புச் செயலராக உள்ளார்.
தேர்தல்களில் தோல்வி
சட்டசபை தேர்தல்களில் 1984-ல் மைலாப்பூர் தொகுதியில் வளர்மதியிடமும் 2014-ல் ஆலந்தூர் இடைத்தேர்தலில் வெங்கட்ராமனிடமும் தோல்வியடைந்தார். 2009 லோக்சபா தேர்தலில் தென்சென்னை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.
ஆலந்தூர் நகராட்சி
ஆனால் 1986-ல் ஆலந்தூர் நகராட்சித் தலைவராக இருந்தார். பின்னர் 1996, 2001, 2006 ஆகிய 3 முறையும் ஆலந்தூர் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
காத்திருப்பு வீண்போகவில்லை...
நகராட்சியைத் தாண்டி சட்டசபை, லோக்சபா தேர்தல்களில் வெல்ல முடியாதவராகவே இருந்து வந்தார் ஆலந்தூர் பாரதி. தற்போது ராஜ்யசபா எம்.பி. வேட்பாளராக ஆலந்தூர் பாரதியை திமுக அறிவித்துள்ளது.
இத்தனை ஆண்டுகால காத்திருப்பு வீண்போகாமல் அரசியலில் அடுத்த கட்ட இடத்துக்கு நகர்ந்திருக்கிறார் ஆலந்தூர் பாரதி.
டி.கே.எஸ். இளங்கோவன்
ஆலந்தூர் பாரதியுடன் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவனையும் ராஜ்யசபா எம்.பி. வேட்பாளராக அறிவித்துள்ளது. திமுக. திராவிடர் இயக்க தத்துவ மேதையாக அழைக்கப்படும் டி.கே.சீனிவாசனின் மகன் தான் டி.கே.எஸ். இளங்கோவன்.
மதிமுக 'ரிட்டர்ன்'
1993-ல் மதிமுக தொடங்கப்பட்டபோது வைகோவுடன் சென்றார். அக்கட்சியில் தீர்மானக் குழு உறுப்பினராக இருந்தார். பின்னர் 1996-ல் திமுகவுக்கு திரும்பி வந்த டி.கே.எஸ். இளங்கோவன், 2009-ம் ஆண்டு வட சென்னை லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தி.மு.கவில் தீர்மானங்கள் குழு உறுப்பினர், அமைப்புச் செயலாளர் பதவிகளை வகித்த அவர் தி.மு.க-வின் தலைமை நிலையச் செய்தித் தொடர்பாளர் ஆக இருந்து வருகிறார்.