ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. போட்டியில்லை: கருணாநிதி திடீர் அறிவிப்பு
சென்னை: சென்னை ஆர்.கே. நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. போட்டியிடாது என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி திடீரென அறிவித்துள்ளார்
ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த அதிமுகவின் வெற்றிவேல் திடீரென ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 27-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இத்தொகுதிக்கான வேட்பு மனுத்தாக்கல் ஜூன் 3-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் இத்தேர்தலை புறக்கணிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இன்று காலை அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று பிற்பகலில் திமுகவும் இத்தேர்தலை தவிர்க்க இருப்பதாக அக்கட்சித் தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
அர்.கே நகர் இடைத்தேர்தலில் தி.மு.கழகம் போட்டியிடாது. #DMK
— KalaignarKarunanidhi (@kalaignar89) May 27, 2015
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், இடைத்தேர்தலில் ஜனநாயகம் மதிக்கப்படாது; ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பணம் திருவிளையாடல் எப்படியெல்லாம் நடந்தது என்பது தெரியாதா?
நீதித்துறை, தேர்தல் ஆணையத்தில் செல்வாக்கு பெற்றவரின் ஆட்சி தற்போது நடக்கிறது; தமிழக சட்டசபைக்கு ஓராண்டுக்குள் தேர்தல் நடைபெற இருப்பதால் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுக போட்டியிடாது என்று கூறியுள்ளார். கருணாநிதியின் இந்த அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.