நான் மட்டும் இந்நேரம் பீல்டில் இருந்திருந்தா அதிரும்ல.... திமுக மீது பாயும் மு.க. அழகிரி
குழப்பமான தமிழக அரசியல் சூழ்நிலையை திமுக சரியாக கையாளவில்லை என ஆதங்கப்பட்டிருக்கிறார் மு.க. அழகிரி.
சென்னை: அதிமுக உட்கட்சி குழப்பம், செயல்படாத தமிழக அரசு, தலைமை இல்லாத அதிமுக இதையெல்லாம் வைத்துக் கொண்டு எதிர்க்கட்சியான திமுக அரசியலில் 'சடுகுடு' ஆட்டம் ஆடியிருக்க வேண்டாமா? என ரொம்பவே ஏக்கப்பட்டிருக்கிறார் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி.
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரி அவ்வப்போது தந்தை கருணாநிதியையும் தாயார் தயாளு அம்மாளையும் கோபாலபுரத்தில் வந்து சந்தித்து விட்டு செல்கிறார். அரசியலைப் பற்றி கேட்டால், நான் அரசியலில் இருக்கிறேனா என எகிறி அடிக்கிறார்.
உன்னிப்பாக கவனிக்கும் அழகிரி
வெளி உலகத்தைப் பொறுத்தவரை மு.க. அழகிரி அமைதியாகிவிட்டார் என்கிற தோற்றம்தான் நிலவுகிறது. ஆனால் தமிழக அரசியலின் அத்தனை நிகழ்வுகளையும் குறிப்பாக திமுகவில் நடப்பது அனைத்தையும் உன்னிப்பாகவே கவனித்துக் கொண்டு வருகிறார் அழகிரி.
ஸ்டாலின் செயல்பாடுகள்
திமுக செயல் தலைவரும் தமது சகோதரருமான ஸ்டாலினை செயல் தலைவராக அறிவித்ததை சுத்தமாகவே ரசிக்கவில்லை அழகிரி. செயல் தலைவரான பின்னராவது ஸ்டாலின் செயல்பாடுகள் தீவிரமடையவில்லை என்பது திமுகவில் ஒருதரப்பினரது கருத்து.
நானெல்லாம் இருந்திருந்தா...
இதைத்தான் மு.க. அழகிரியும் தமது ஆதரவாளர்களிடம் பகிர்ந்து வருகிறாராம். இப்படியான ஒரு அரசியல் சூழ்நிலையில் நானெல்லாம் களத்தில் இருந்திருந்தா கதிகலங்கிப் போயிருப்பானுக...நம்ம கட்சின்னு இல்லை.. எந்த ஒரு எதிர்க்கட்சியும் உருப்படியா செயல்படுற மாதிரியே தெரியலையே என ஆதங்கப்பட்டிருக்கிறார் அழகிரி.
கமெண்டுகள்...
அத்துடன் ஆதரவாளர்களுடன் ஆலோசனைகள் நடத்தும் போது அரசியல் நிகழ்வுகளை குறித்து ரொம்பவே நக்கலடித்து பேசுகிறாராம் அழகிரி. அதுவும் குறிப்பாக சட்டசபையில் ஸ்டாலின் கிழிக்கப்பட்ட நிகழ்வைப் பார்த்து ரொம்பவே ஓட்டிவிட்டாராம் அழகிரி என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.