சேலம் உருக்காலை பங்குகளை தனியாருக்கு விற்க திருச்சி சிவா, ரங்கராஜன் எதிர்ப்பு-அதிமுக எம்பிக்கள் அமளி
சேலம் உருக்காலை பங்குகளை தனியாருக்கு விற்க ராஜ்யசபாவில் தமிழக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சென்னை: சேலம் உருக்காலை பங்குகளை தனியாருக்கு விற்க கூடாது என ராஜ்யசபாவில் திமுக எம்பி திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் கட்சியின் எம்பி டிகே ரங்கராஜன் உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.
பொதுத்துறை நிறுவனமான சேலம் உருக்காலையின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ராஜ்யசபாவில் இன்று இந்த பிரச்சனையை திமுக எம்பி திருச்சி சிவா எழுப்பினார். அப்போது தங்களையும் பேச அனுமதிக்கக் கோரி விஜிலா சத்யானந்த் உள்ளிட்ட அதிமுக எம்பிக்கள் கூச்சலிட்டனர். அதிமுக எம்பிக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என ராஜ்யசபா துணைத் தலைவர் குரியன் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டார். ஆனாலும் அதிமுக எம்பிக்கள் அமளி நீடித்தது.
பின்னர் திருச்சி சிவா பேசுகையில், சேலம் உருக்காலை லாபத்தில் இயங்கி வருகிறது. அதன் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது என்றார். அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி டி.கே. ரங்கராஜனும் சேலம் உருக்காலை பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய எதிர்ப்பு தெரிவித்தார்.