சட்டசபையில் பேச அனுமதி மறுப்பு… அதனால் வெளிநடப்பு: ஸ்டாலின்
சென்னை: மவுலிவாக்கம் கட்டிட விபத்து பற்றியும் சேஷசமுத்திரம் கலவரம் பற்றியும் சட்டசபையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதால், வெளிநடப்பு செய்ததாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார்.
சட்டசபையின் நான்காம் நாள் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. முதல்வர் 110 விதி எண் கீழ் அறிக்கை வாசித்த உடன், ஸ்டாலின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேச முற்பட்டார். அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதனைக்கண்டித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
வெளிநடப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், மவுலிவாக்கம் கட்டிட விபத்து குறித்த நீதிபதி ரகுபதி அறிக்கை முழுமையாக இல்லை என்றார். சி.எம்.டி.ஏ அதிகாரிகளை நீதிபதி ரகுபதி கமிஷன் விசாரிக்கவில்லை என்றார்.
மேலும் அரசுக்கு சாதகமாக ரகுபதி கமிஷன் அறிக்கை தயாரித்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார். விசாரணைக்கு முன்பே தமது அரசுக்கும், விபத்துக்கும் தொடர்பு இல்லை என ஜெயலலிதா கருத்து கூறியிருந்ததை ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.
உயர்நீதிமன்றம் கேள்வி கேட்ட பிறகே ரகுபதி கமிஷன் அறிக்கை அவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். நீதிபதி ரகுபதி கமிஷன் அறிக்கை முழுமை பெறாத அறிக்கை என்றும் அவர் கூறினார்.
விசாரணை கமிஷனுக்கான விதிமுறைகள் அறிக்கை தயாரிக்க பின்பற்றப்படவில்லை என்றார். கட்டிடம் கட்டுவதற்கு முன் 2 அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், எதற்காக பிறப்பிக்கப்பட்டது என்பதற்கு அறிக்கையில் விளக்கம் இல்லையென்றும் கூறியுள்ளார்.
இதனிடையே தமிழக சட்டசபையில் இருந்து காங்கிரஸ் மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும் வெளி நடப்பு செய்தனர்.