26 பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட சிவகங்கை சிறுமி - திமுக பிரமுகர், அரசுப் பேருந்து கண்டக்டர் கைது
சிவகங்கை: சிவகங்கையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் திமுகவைச் சேர்ந்த நிர்வாகி ஒருவரும், அரசு பேருந்து நடத்துனரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மஜீத் சாலையில் வசித்து வந்த சிறுமி தனது தந்தை, சகோதரர் உட்பட 26 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து காவல்துறை மேற்கொண்ட உயர்மட்ட விசாரணை மூலம் வெளி உலகுக்கு தெரியவந்தது.
தன்னை 26 பேர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக சிவகங்கை மகளிர் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த வழக்கில் ஏற்கனவே சிறுமியின் தந்தை மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் காவல்துறை உதவி ஆய்வாளர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய புகாரில், சிவகங்கையைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் நமச்சிவாயம் என்பவர் கைது செய்யப்பட்டார். இதே வழக்கில், தொடர்புடைய சிவகங்கை நகர திமுக பொருளாளர் முத்துராக்கு என்பவரையும், போலீசார் கைது செய்தனர்.