கலப்படம் இல்லைன்னா தற்கொலை செஞ்சிப்பேன்னு சொன்னீங்களே... ராஜேந்திர பாலாஜியை வாரிய ஸ்டாலின்
தனியார் பாலில் கலப்படம் செய்யப்படுவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது குறித்து சட்டசபையில் ஸ்டாலின் இன்று கேள்வி எழுப்பினார்.
சென்னை: தனியார் பாலில் கலப்படம் இல்லையெனில் தற்கொலை செய்துகொள்வேன் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது குறித்து திமுகவினர் சட்டசபையில் இன்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாலில் கலப்படம் செய்வதாக தனக்கு தகவல் வந்ததாக கூறினார்.
தனியார் பாலில் ரசாயனம் கலக்கப்படுவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அண்மையில் குற்றம் சாட்டினார். இதனால் குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படுவதாகவும் குண்டைத் தூக்கிப்போட்டார்.
அமைச்சரின் இந்த பேச்சுக்கு தனியார் பால் நிறுவனங்களும் பால் முகவர்களும் கண்டனம் தெரிவித்ததோடு பாலில் எந்தக் கலப்படமும் செய்யப்படவில்லை என மறுப்புத் தெரிவித்தனர். எதற்கும் அசராத அமைச்சர், தனியல் பாலில் கலப்படம் செய்யப்படுவது நிரூபிக்க படாவிட்டால் பதவியை ராஜினாமா செய்வேன், தூக்கில் தொங்குவேன் என்றெல்லாம் கூறினார்.
பதவி விலக வேண்டும்
இந்நிலையில் தனியார் பாலில் ரசாயனங்கள் ஏதும் கலக்கப்படவில்லை என உணவு கட்டுப்பாட்டுத்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதவி விலக வேண்டும் என பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது.
தூக்கில் தொங்குவேன்
இந்த பிரச்சனையை சட்டசபையில் திமுக இன்று எழுப்பியது. இதுகுறித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பாலில் கலப்படம் நிரூபிக்கப்படாவிட்டால் தூக்கில் தொங்குவேன் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார் என்று தெரிவித்தார்.
நடவடிக்கை எடுக்காதது ஏன்?
தனியார் பாலில் கலப்படம் இருப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியே கூறியிருந்தார் என்று ஸ்டாலின் குறிப்பிட்டார். பாலில் கலப்படம் குறித்து இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
எனக்கு தகவல் வந்தது
இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாலில் கலப்படம் செய்யப்படுவதாக தனக்கு தகவல் வந்ததாக கூறினார். தானாக எதையும் கூறவில்லை என்றும் அவர் கூறினார். மேலும் பாலில் கலப்படம் செய்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்தார்.