விடாது கருப்பாய் துரத்தும் ரெய்டுகள்.. வழக்குகள்... வேறுவழியே இல்லாமல் இணையும் அதிமுக கோஷ்டிகள்!
அமைச்சர் தங்கமணி வீட்டில் அமைச்சர்கள் நேற்று இரவு நடத்திய பேச்சுவார்த்தைக்கு அதிமுக அம்மா அணியினர் மீது அடுத்தடுத்து பாயும் வழக்குகளும் ஐடி ரெய்டும் காரணமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: அமைச்சர்கள் மீது அடுத்தடுத்து பாயும் வழக்குகளால்தான் அதிமுகவின் இரு கோஷ்டிகளும் இணைகிறதா அல்லது அதிமுகவையும் ஆட்சியையும் காப்பாற்றுவதற்காக இரு கோஷ்டிகளும் இணைய பேச்சு வார்த்தை நடத்துகிறார்களா என்ற கேள்விகள் பொதுமக்களிடம் எழுந்துள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் சசிகலா கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளர் ஆனார். ஆனால் அதனை கட்சிக்குள் இருக்கும் பெரும்பாலான தொண்டர்கள் விரும்பவில்லை என்பதை விட தமிழக பெண்கள் ஒருவர் கூட விரும்பவில்லை. அதிமுகவின் பெரும் பலமே பெண்களின் ஓட்டுதான்.
சசிகலா கட்சியின் பொதுச் செயலாளராகி, அந்த கட்சி பதவியோடு தன்னை நிறுத்திக்கொள்ளாமல் ஆட்சியைப் பிடிக்கவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். ஆனால், ஆளுநர் ஒப்புதல் தராமல் இழுத்தடித்துக்கொண்டு வந்த நேரத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் தண்டனை பெற்று பெங்களூரு சிறைக்குச் சென்றார்.
சிறைக்குச் செல்லும் போதும், தன் குடும்பத்திலிருந்து கட்சியும் ஆட்சியும் கைவிட்டுப் போகக் கூடாது என்பதற்காக தினகரனை கட்சியின் துணை பொது செயலாளராக நியமித்துச் சென்றார். ஆனால், அதையும் கட்சியில் இருந்த பெரும்பாலானோர் விரும்பவில்லை
கூவத்தூர் முகாம்
ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக கூவத்தூர் தனியார் விடுதியில் எம்.எல்.ஏக்களை பத்து நாட்களுக்கும் மேலாக அடைத்து வைத்திருந்தார். அப்போது அங்கிருந்து வெளியான குத்தாட்ட வீடியோக்கள் மக்கள் மனதில் எம்.எல்.ஏக்கள் மீது தீராத கோபத்தை உருவாக்கியது.
எடப்பாடி பழனிச்சாமி முதல்வர்
தான் முதல்வர் ஆகாவிட்டாலும் பரவாயில்லை, தன் பேச்சைக் கேட்டு நடக்கும் நம்பிக்கைக்குரிய எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வேண்டும் என்று, அவரை முதல்வராக்கினார். ஆனால் கடந்த ஒன்றரை மாதங்களாக தினகரன் தான் ஆட்சியை நடத்துகிறார் என்னும் அளவுக்கு எடப்பாடி அமைதியான முதல்வராக இருந்து வருகிறார். தமிழகத்தில் நிலவி வரும் எந்த பிரச்சனைக்கும் அவர் வாய் திறப்பதே இல்லை.
ஆர்கே நகர் இடைதேர்தல்
ஆர்கே நகரில் ஏப்ரல் 12ஆம் தேதி இடைதேர்தல் நடக்க இருந்தது. அதில் எம்ஜிஆரின் வளர்ப்பு மகள் சுதா விஜயகுமார் தான் வேட்பாளராக போட்டியிடுவதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தினகரன் வேட்பாளராக தன்னை முன்னிறுத்திக்கொண்டார். தேர்தல் கருத்துக் கணிப்புகள் அனைத்தும், அவருக்கு நிலைமை கொஞ்சம் கூட சாதகமாக இல்லை என்றே கூறிவந்தன. உடனே, ஆர்கே நகரில் மக்களுக்கு விதவிதமான முறைகளில் பணம் கொடுக்க ஆரம்பித்தார். அதில் அவருடைய ஆட்கள் கைது செய்யப்பட்ட போதிலும் அவர் மீண்டும் மீண்டும் அதே தவறை செய்து வந்தார். திமுக, ஒபிஎஸ் கோஷ்டி, பாஜக ஆகிய கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் மீண்டும் மீண்டும் புகார் தர ஆரம்பித்தன.
அதிரடி ரெய்டு
ஆர்கே நகரில் தினகரன் அணியினர் பணப்பட்டுவாடா செய்கின்றனர் என்ற புகாரையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், முன்னாள் எம்.பி சிட்லபாக்கம் ராஜேந்திரன், துணைவேந்தர் கீதா லட்சுமி ஆகியோரது வீடுகளில் பல மணிநேரம் சோதனை மேற்கொண்டது வருமான வரித்துறை. அதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கின.
'லீக்'கான ஆதாரம்
அமைச்சர் விஜயபாஸ்கர், ஆர்கே நகரில் பலர் மூலம் பணப்பட்டுவாடா செய்தார் என்று ஒரு ஆவணம் வெளியானது. அதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, செங்கோட்டையன் உள்ளிட்டோரின் பெயரும் இருந்தது அதிர்ச்சியளித்தது. இதன் மூலம் அவர்கள் என்றாவது ஒருநாள் விசாரணை வளையத்துக்குள் சிக்குவார்கள் என்ற நிலை உருவானது.
சிக்கிலில் மாட்டிய நால்வர்
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமன வரித்துறையினர் சோதனை மேற்கொண்டபோது கிடைத்த முக்கிய ஆவணங்களைக் கொண்டு, உடுமலை ராதாகிருஷ்ணன், காமராஜ், தளவாய் சுந்தரம் ஆகியோர் மீது அபிராமபுரம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தது வருமான வரித்துறை. இதனால், இவர்கள் நால்வரும் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்கிற சூழ்நிலை உருவானது. தினகரனின் அனுபவமில்லாத அரசியலால் அடுத்தடுத்து வழக்குகள், ரெய்டு என அமைச்சர்களும் கட்சியினரும் தீராத மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.
வட்டத்துக்குள் சிக்கிய தினகரன்
ஏற்கனவே கடந்த 7ஆம் தேதியிலிருந்து ஐடி ரெய்டில் சிக்கி விஜயபாஸ்கர் உள்ளிட்டவர்கள் தவித்துக்கொண்டிருக்கும்போது, தினகரன் இரட்டை இலை சின்னத்தை மீட்க இடைத்தரகர்கள் மூலம் பணம் கொடுத்தார் என்று டெல்லி குற்றப்பிரிவு போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். அவரை கைது செய்யவும் டெல்லி குற்றப் பிரிவு போலீசார் சென்னையில் காத்திருக்கின்றனர்.
கட்சியின் மீது தளறும் குடும்பப் பிடி
சசிகலா சிறையில் உள்ளார். தினகரன் இந்த ஒன்றரை மாதங்களில் தன்னை சிறந்த நிர்வாகியாக, தொண்டர்கள் விரும்பும் தலைவராக தன்னை உருவாக்கிக்கொள்ளவில்லை. எல்லாவற்றையும் பணத்தின் மூலமே சாதித்துக்கொள்ளலாம் என்கிற அவருடைய அணுகுமுறை கட்சிக்கும் ஆட்சிக்கும் பலத்த சிக்கலை ஏற்படுத்தியுள்ளதால், அவர் மீது அனைத்து அமைச்சர்களும் நம்பிக்கை இழந்துவிட்டனர்.
தம்பிதுரை - தினகரன் சந்திப்பு
துணை சபாநாயகர் தம்பிதுரை தினகரனை நேரில் சந்தித்து இதுகுறித்து பேசியதாகவும், வாக்குவாதங்கள் எழுந்ததாகவும் கூறப்படுகிறது. ஆகையால் கட்சியில் தினகரனின் பிடி தளர்ந்துவிட்டது என்பதையே நேற்று இரவு அமைச்சர் தங்கமணி வீட்டில் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை சுட்டிக்காட்டுகிறது.
நாங்க அண்ணன் - தம்பி...
அடுத்தடுத்து அமைச்சர்கள் மீதும், தினகரன் மீதும் வழக்குகளால் சசிகலா, ஓபிஎஸ் கோஷ்டிகள் ஒன்றாக இணைவது குறித்து யோசிக்க ஆரம்பித்துள்ளார்கள். அதன் வெளிப்பாடுதான் அமைச்சர்கள் இதை அண்ணன் தம்பி சண்டை என்று வர்ணிக்கிறார்கள். எது எப்படியோ எம்ஜிஆர் நிறுவிய அதிமுக நீடிக்க வேண்டும் என்பதே ஒன்றரை கோடி தொண்டர்களின் எதிர்பார்ப்பு. ஆனால் மத்திய பாஜக அரசு இதை அனுமதிக்குமா என்பதும் கேள்விக்குறியே.