அச்சச்சோ, திமுக பலவீனம் இப்படி வெளியாகிப்போச்சே.. ஸ்டாலினை கலாய்க்கும் ஓ.பி.எஸ்
என் மீதான அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதன் மூலம் திமுகவின் பலவீனத்தை மு.க.ஸ்டாலின் வெளிப்படுத்தியுள்ளார் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியின் பிரசார பொதுக் கூட்டத்தின்போது தன் மீது ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் திமுகவின் பலவீனத்தின் வெளிப்பாடு என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் திமுக வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து நடந்த தேர்தல் பொதுக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் ஓ.பன்னீர் செல்வத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார்.
ஓ.பன்னீர் செல்வம் தற்போது 10 சதவீதம் உண்மைகளையே சொல்லியுள்ளதாகவும், மீதமுள்ள 90 சதவீதம் மறைக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதற்கு பதிலளித்து ஓபிஎஸ் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
முதல்வராகும் எண்ணம் இல்லை
அப்போது அவர் தெரிவிக்கையில், என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் திமுகவின் பலவீனத்தையே காட்டுகிறது. ஜெயலலிதா மறைந்தபோது தமிழக முதல்வராகும் எண்ணம் எனக்கு இல்லை. ஆனால் மூத்த அமைச்சர்கள் என்னிடம் கேட்டுக் கொண்டதால் முதல்வரானேன்.
சசிகலாவுக்கு பொதுச் செயலாளர்
பின்னர் சிறிது நாள்கள் கழித்து சசிகலாவுக்கு பொதுச் செயலாளர் பதவியை வழங்கலாம் என்று கேட்டனா். அதற்கு நான் ஒப்புக் கொண்டு முன்மொழிந்தேன். பின்னர் எண்ணூர் துறைமுகத்தில் எண்ணெய் கொட்டியபோது அதை அகற்றும் பணியை நேரில் சென்று ஆய்வு செய்தேன்.
மூத்த அமைச்சர்களிடம் அழைப்பு
அப்போது மூத்த அமைச்சர்களிடம் எனக்கு அழைப்பு வந்தது. அதை ஏற்று தலைமை கழகத்துக்கு சென்றேன். அப்போது நான் வருவதற்குள் சசிகலாவை சட்டசபை குழுத் தலைவராக தேர்ந்தெடுத்துவிட்டேன். எனது பேச்சை யாரும் கேட்கவில்லை. என்னை நிர்பந்தப்படுத்தி முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ய வைத்தனர். இதை தொண்டர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால் என்னையே முன்மொழிய செய்தார்கள்.
பல நிர்வாகிகள் அதிருப்தி
சசிகலா முதல்வராக ஆசைப்பட்டதால் பிரச்சினை வெடித்தது. அவரை மக்கள் ஏற்க மாட்டார்கள், அவசரப்பட்டு ஏன் பதவியை ராஜினாமா செய்தீர்கள் என்று மூத்த நிர்வாகிகள் என்னிடம் கேட்டனர். இதனால் நான் அம்மா சமாதியில் எனது மனக்குமுறல்களை கொட்டினேன்.
குடும்ப ஆதிக்கம் கூடாது
அதிமுக என்பது பொதுவான கட்சி. இதில் குடும்ப ஆதிக்கம் இருக்கக் கூடாது என்ற விதிமுறைகளை எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் வகுத்தனர். எனவே கட்சியின் கொள்கைகளுக்கு மாறாக அவர்கள் செயல்பட்டதால் நான் வெளியேறினேன் என்றார்.