வன்னியருக்கு இடஒதுக்கீடு கொடுத்ததே தி.மு.க. உங்க அப்பாவிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்
ஆனால் டாக்டர் அன்புமணி ராமதாஸின் தந்தையை அழைத்துப் பேசி வன்னியர் சமுதாயத்திற்காகமுதன் முதலில் 20 சதவீத இட ஒதுக்கீட்டும் மத்திய அரசில் வன்னியர் ஒருவருக்கு கேபினட் அமைச்சர் பதவியும் கொடுத்தவர்தான் எங்கள் தலைவர் கருணாநிதி. இல்லையென்று அன்புமணியால் மறுக்க முடியுமா?
இப்படி ஏதாவது ஒரு சாதனையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக கோலோச்சிய டாக்டர் அன்புமணி தன் துறையில் வன்னிய சமுதாயத்திற்காக செய்ததாகக் கூற முடியுமா? அன்று திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டால் அரசு பணிகளிலும், தலைமைச் செயலகங்களிலும் இன்று வன்னியர் சமுதாயத்தினர் முக்கிய பதவிகளுக்கு வந்திருப்பதைப் பார்க்க முடிகிறது.
ஆனால் அதை அன்புமணியின் தந்தை மறக்கவில்லை. இட ஒதுக்கீடு வழங்கிய தலைவர் கருணாநிதியை இதே விழுப்புரம் மாவட்டத்திற்கு அழைத்து வந்து கூட்டம் போட்டு, தனியாக நாற்காலி ஒன்றுப் போட்டு "கருணாநிதி முதல்வராக வந்தால்தான் சமூக நீதி காப்பாற்றப்படும்" என்று பகிரங்கமாக அறிவித்தார். டாக்டர் அன்புமணிக்குத் தெரியவில்லை என்றால் தன் தந்தையிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
ஏன் சமீபத்தில் கூட தன் பேத்தியின் திருமண விழாவில் பேசிய அன்புமணி ராமதாஸின் தந்தை, "1989 ஆம் ஆண்டு ஆலிவர் ரோட்டில் உள்ள அவரது வீட்டில் இடஒதுக்கீடு பற்றி பேசிய நாள் முதல் எங்கள் நட்பு தொடர்கிறது" என்று கூறியதை ஏனோ டாக்டர் அன்புமணி மறந்து விட்டது விந்தையாக இருக்கிறது.
டாக்டர் அன்புமணி தன் பதவிக்காக எதையும் பேசி விட்டுப் போகட்டும். ஆனால் இந்த சமுதாயத்திற்காக தி.மு.க. ஆற்றிய பணிகளை கொச்சைப் படுத்திப் பேச வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.