ஆட்சியை கலைக்க ஸ்டாலின் எதற்கு, பழனிசாமியே போதும்! டி.கே.எஸ்.இளங்கோவன் பரபர பேட்டி
தமிழகத்தில் அதிமுக ஆட்சியைக் கலைக்க ஸ்டாலின் வேண்டாம், முதல்வர் பழனிசாமியே போதும் என்று டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.
ராஜபாளையம் : அதிமுக ஆட்சியை கலைப்பதற்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வேண்டாம், முதல்வர் பழனிசாமியே போதும் என்று திமுக செய்தித்தொடர்பாளரும் டி.கே.எஸ் இளங்கோவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழக அரசியல் நிலவரம் குறித்து திமுக செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் அதிமுகவில் நாள்தோறும் நடக்கும் நிகழ்வுகளை வைத்தே இவர்கள் பதவிக்காகவும், கணத்திற்காகவும் தான் போட்டி போட்டுக் கொள்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் அதிமுக அரசை கலைக்க திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தேவையில்லை, முதல்வர் பழனிசாமியே போதும். தீபாவிற்கும் போயஸ் கார்டனில் உரிமை இருப்பதால் அவர் போராட்டம் நடத்துகிறார் இதில் என்ன தவறு இருக்கிறது.
தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிளாஸ்டிக் அரிசியே இல்லை சொல்வதும் அரசு தான், அதை மறுப்பது அரசு தான். எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்தில் அமைப்பது குறித்து அரசு வாய் திறக்காமலே உள்ளது.
போயஸ் கார்டன் வந்த ஜெ. தீபா குறித்த செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர் மீதான தாக்குதல் கண்டனத்திற்குரியது. செய்தியாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கதையாகி வருவதாகவும் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.