தமிழக பட்ஜெட் 2015: திமுக வெளிநடப்பு… கருப்புச் சட்டை அணிந்து தேமுதிக எம்.எல்.ஏக்கள் தர்ணா
சென்னை: தமிழக சட்டசபையில் பட்ஜெட் உரையை புறக்கணித்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட தேமுதிக எம்.எல்.ஏக்கள் கறுப்பு சட்டை அணிந்து சட்டசபை வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
2015-16 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்தார்.
திமுகவினர் வெளிநடப்பு
அவை கூடியதும் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த உடன் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க திமுக எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தினர். ஆனால் அதற்கு சபாநாயகர், இன்றைய தினம் பட்ஜெட் மட்டும் தாக்கல் செய்யவேண்டும் என்று கூறினார். ஆனால் அதனை திமுக எம்.எல்.ஏக்கள் ஏற்கவில்லை. சபாநாயகரைக் கண்டித்து திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
தேமுதிகவிருக்கு சிக்கல்
இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் கடந்த மாதம் நடைபெற்றது. அப்போது, பேரவைத் தலைவருடன் தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரைத் தாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, தேமுதிகவினர் அனைவரும் பேரவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
விளக்கம் கேட்டு நோட்டீஸ்
பேரவையில் அவர்கள் நடந்து கொண்ட விதம் தொடர்பாக விவாதித்து நடவடிக்கை எடுப்பதற்கான பரிந்துரைகளை அளிக்க, அந்தப் பிரச்னை, அவை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தக் குழுவின் கூட்டம் கடந்த மாதம் நடைபெற்று தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் சிலருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
கருப்பு சட்டையுடன் தர்ணா
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்ற பேரவைக் கூட்டத் தொடரானது, இப்போது பட்ஜெட் கூட்டத் தொடர் வரை தொடர்கிறது. எனவே, தேமுதிக எம்.எல்.ஏ.க்களுக்கு விதிக்கப்பட்ட இடைநீக்க நடவடிக்கை பட்ஜெட் கூட்டத் தொடருக்கும் பொருந்தும். இதனால் தேமுதிக உறுப்பினர்கள் சட்டப்பேரவை வளாகத்தில் கருப்பு சட்டை அணிந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சபைக்கு வராத விஜயகாந்த்
தனது கட்சி எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க தேமுதிக தலைவர் விஜயகாந்த் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரும் இன்றைய தினம் சட்டசபைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.