அண்ணே, ஒரு விளம்பரம்.. சொந்த காசில் சூனியம் வைத்ததா திமுக?
சென்னை: திமுக மிகவும் ஆவேசமாக டிவி சேனல்களில் ஒளிபரப்பிய விளம்பரங்கள், அந்த கட்சிக்கே எதிரானதாக திரும்பிவிட்டது என்கிறார்கள் விவரம் அறிந்தோர்.
விஜயகாந்த் எந்த கூட்டணிக்கு செல்லப்போகிறார் என்பது முடிவாகாத நிலையிலேயே, "சொன்னீங்களே, செஞ்சீங்களா" என்ற தலைப்பில் நாளிதழ்களில் முழுப்பக்க விளம்பரம் கொடுத்தது திமுக.
ஆனால் இந்த விளம்பரத்தை பார்த்த மக்களோ, ஆளும் கட்சியே விளம்பரம் கொடுக்காத நிலையில், திமுக இத்தனை பத்திரிகைகளில், முதல் பக்கத்தில் முழு பக்க விளம்பரம் கொடுத்துள்ளார்களே? அப்படியானால், இவர்களிடம் நிறைய பணம் குவிந்து இருக்கும்போல.. என்று பேசத்தொடங்கினர்.
விமர்சனம்
சமூக வலைத்தளங்களிலும், திமுக பண பலம் கொண்ட கட்சி என்பதால்தான் இந்த விளம்பரம் தரப்படுகிறது என்ற விமர்சனம் தீவிரமாக ஓடிக்கொண்டிருந்தது. இதை உணர்ந்த பிறகே முழுப்பக்க விளம்பரத்தை நிறுத்தியது திமுக.
கவிழ்த்த கஸ்தூரி பாட்டி
இதேபோல, அதிமுக பற்றி குறை சொல்லி கஸ்தூரி பாட்டியை வைத்து எடுக்கப்பட்ட விளம்பரத்தை பாமர மக்கள் பலரும் உண்மை என்றே நம்பினர். ஆனால் அதிமுக விளம்பரத்திலும் அதே பாட்டி நடித்த தகவல் தீ போல பரவியதும், "அத்தனையும் நடிப்பா.." என வசந்தமாளிகை சிவாஜி கணேசன்போல ஷாக் ஆகினர் மக்கள்.
வளர்ச்சிக்கு பல திட்டங்கள்
கருணாநிதியின் குடும்ப தொலைக்காட்சிகள் அத்தனையிலும் எப்போது பார்த்தாலும், கருணாநிதியோ, ஸ்டாலினோ, அல்லது கனிமொழியோதான் பேசிக்கொண்டிருந்தனர். விளம்பரங்களில் ஸ்டாலின் வளர்ச்சிக்கு பல திட்டங்களை வைத்துள்ளோம் என்று பேசினார். மக்களோ, இத்தனை வருடமாக ஆண்டபோது ஏன் அந்த திட்டங்களை செயல்படுத்தவில்லை என பதில் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தனர்.
ஏன் தாலி சென்டிமென்ட்
டாஸ்மாக் கடைகளால் பெண்கள் தாலியை இழந்துவிட்டதாக விளம்பரம் செய்யப்பட்டபோது, இவர்களுக்குதான் தாலி மீது நம்பிக்கை கிடையாதே, ஏன் இப்போது தாலி சென்டிமென்ட்டை முன்னிருத்துகிறார்கள் என சமூக வலைத்தளத்தில் கிண்டல் எழுந்தது.
மது ஆலைகள்
மது விலக்கு குறித்து பேசும் திமுகவினர் மது ஆலைகள் நடத்துகிறார்கள் என்ற தகவல் சமூக வலைத்தளத்தில் தீயாய் பரப்பப்பட்டது. இதையெல்லாம் உளவுத்துறை மூலம் அறிந்த ஜெயலலிதா, திமுக குறித்து தாக்குதல் விளம்பரங்களை ஒளிபரப்ப வேண்டாம் என்று அதிமுக டீமிடம் கேட்டுக்கொண்டார்.
சொந்த காசில் சூனியம்
இப்படி திமுக செய்த அத்தனை விளம்பரங்களிலும் அவர்களுக்கு எதிரான பாயிண்டுகளை தேர்ந்தெடுத்து திருப்பி தாக்கியுள்ளனர் மக்கள். சொந்த காசில் சூனியம் வைத்த கதையாகிவிட்டது திமுகவுக்கு.
ஸ்டாலின் சொன்னபடி..
அதேநேரம், திமுகவை வலுவான எதிர்க்கட்சியாக மக்கள் சட்டசபைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஸ்டாலின் மன்னிப்பு கேட்டுக்கொண்டபடி, திமுகவினர் இப்போது தப்புகளை திருத்தி நடந்து கொண்டால், அடுத்த முறை ஆளும் கட்சியாக அனுப்பி வைக்கவும் இதே மக்கள் தயங்க மாட்டார்கள்.