சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த ரங்கநாதன் மீது திமுக நடவடிக்கை?
சட்டசபையில் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த எம்.எல்.ஏ. ரங்கநாதன் மீது திமுக தலைமை நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை: சட்டசபையில் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அட்டகாசம் செய்த எம்.எல்.ஏ. ரங்கநாதன் மீது திமுக நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது சனிக்கிழமையன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது ரகசிய வாக்கெடுப்பு நடத்த திமுக எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தினர்.
இதனால் சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது. இந்த அமளியின் போது சபாநாயகர் இருக்கையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் செல்வம் மற்றும் ரங்கநாதன் அமர்ந்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
இது தொடர்பாக செல்வம் மற்றும் ரங்கநாதனிடம் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் விசாரணை நடத்தியுள்ளார். அப்போது தம்மை நெருக்கியதால் சபாநாயகர் இருக்கையில் அமர நேர்ந்ததாக செல்வம் விளக்கம் அளித்திருக்கிறார்.
இதை ஏற்றுக் கொண்ட ஸ்டாலின், ரங்கநாதன் திட்டமிட்டு அமர்ந்து சேட்டை செய்ததை கடுமையாக கண்டித்திருக்கிறார். இதனால் ரங்கநாதன் மீது திமுக மேலிடம் விரைவில் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.