மீனவர் படகுகளை கைப்பற்ற இலங்கைக்கு ஆலோசனை: சு.சுவாமியின் கொடும்பாவி 3வது நாளாக எரிப்பு!
சென்னை: தமிழக மீனவர் படகுகளை சிறைபிடிக்க இலங்கை அரசுக்கு ஆலோசனை கூறினேன் என்று பேட்டியளித்த பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமியின் கொடும்பாவி 3வது நாளாக இன்றும் எரிக்கப்பட்டது.
பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் தமிழக மீனவர்களின் படகுகளை சிறைபிடிக்க தாமே ஆலோசனை கூறினேன் என்று கூறியிருந்தார்.
சுப்பிரமணியன் சுவாமியின் கருத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் பிரதமர் மோடிக்கு இது பற்றி கடிதம் எழுதியுள்ளார். தமிழக பாஜகவும் கூட சுவாமிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
2வது நாள்..
மேலும் தந்தி டிவியில் பேட்டி வெளியான அன்றே கடலூர் உள்ளிட்ட இடங்களில் சுப்பிரமணியன் சுவாமியின் கொடும்பாவியை தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் எரித்தனர். சென்னையில் நேற்று எழும்பூரில் தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில பொருளாளர் அக்ரம்கான் தலைமையில் சுப்ரமமணியசாமி கொடும்பாவியை எரித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதேபோல் கோயம்பேட்டில் த.வா.க. மாநில துணை பொதுச் செயலாளர் சத்ரியன் து.வெ.வேணுகோபால் தலைமையில் சுப்பிரமணியன் சுவாமி கொடும்பாவி எரிக்கப்பட்டது. மேலும் காட்டுமன்னார்கோவில், உளுந்தூர்பேட்டையிலும் சுப்பிரமணியன் சுவாமியின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.
புதுச்சேரியில்
புதுவையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில அமைப்பாளர் ஸ்ரீதர் தலைமையில் ராஜா திரை அரங்கம் அருகே காமராஜர் சிலை எதிரே சுப்பிரமணியசாமியின் கொடும்பாவி எரித்து ஆர்பாட்டம் நடைபெற்றது.
3வது நாளாக.. டெசோ ஆர்ப்பாட்டத்தில்..
சென்னையில் இன்று திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற டெசோ ஆர்ப்பாட்டத்தின் போதும் சுப்பிரமணியன் சுவாமியின் கொடும்பாவியை திமுக தொண்டர்கள் எரித்தனர்.
மேலும் பண்ருட்டி, வேலூர் ஆகிய இடங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சுப்பிரமணியன் சுவாமியின் கொடும்பாவியை இன்று எரித்துள்ளனர்.
சேலம் மாணவர்கள்..
சேலத்தில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் சுப்பிரமணியன் சுவாமியின் கொடும்பாவியை எரித்து போராட்டம் நடத்தினர்.
ராமேஸ்வரத்தில்..,
ராமேஸ்வரத்தில் மீனவர் சங்க நிர்வாகிகள் சுப்பிரமணியன் சுவாமியின் கொடும்பாவிக்கு செருப்புமாலை போட்டு எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
தருமபுரியில்...
தருமபுரியிலும் சுப்பிரமணியன் சுவாமி உருவபொம்மை எரிக்கப்பட்டது. தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மகளிர் அணிச் செயலர் ஜெயலட்சுமி பாலு, இளைஞரணி துனைத் தலைவர் படையாட்சி சிவகுமார் தலைமையில் இந்த கொடும்பாவி எரிப்புப் போராட்டம் நடத்தப்பட்டது