மாட்டிறைச்சி தடை விவகாரம்: சட்டசபையில் திமுக வெளிநடப்பு!
மாட்டிறைச்சி விவகாரத்தில் தனி தீர்மானம் நிறைவேற்ற முதல்வர் மறுப்பு தெரிவித்ததால் திமுக உள்ளிட்ட தோழமை கட்சிகள் சட்டசபையில் வெளிநடப்பு செய்தன.
சென்னை: மாட்டிறைச்சி தடை குறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் அதை எதிர்த்து தனி தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்ற இயலாது என்று முதல்வர் அளித்த விளக்கத்தை ஏற்க மறுப்பு தெரிவித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடத்த சட்டசபை கடந்த 14-ஆம் தேதி கூடியது. அன்று முதலே சட்டசபையில் அமளி துமளிக்கு பஞ்சம் இல்லாமல் உள்ளது. அவ்வபோது எதிர்க்கட்சிகள் கூச்சல் குழப்பங்களில் ஈடுபடுவதும், வெளிநடப்பு செய்வதும் நடந்து வருகிறது.
கூவத்தூர் பேரத்தில் தொடங்கி ஜிஎஸ்டி மசோதா வரை சட்டசபையில் கூச்சல் குழப்பங்கள் நிலவியது. இந்நிலையில் இன்று அவை கூடியது. அப்போது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மாட்டிறைச்சி விவகாரத்தை எழுப்பின.
புதுவை, கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் சட்டசபைகளில் மாட்டிறைச்சி தடையை எதிர்த்து தனி தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல் தமிழக சட்டசபையில் தனி தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.
அப்போது பேசிய முதல்வர், தமிழகத்தில் பசுவதை தடைச் சட்டம் 40 ஆண்டுகாலம் அமலில் உள்ளது. மக்களின் கோரிக்கையை ஏற்று இந்த அரசு செயல்படும். மேலும் மாட்டிறைச்சி தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் அதுபோல் தீர்மானம் நிறைவேற்ற இயலாது என்றார்.
இந்த விளக்கத்தை ஏற்க மறுத்தது திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகளும் வெளிநடப்பு செய்தன. இதைத் தொடர்ந்து அதிமுகவின் கூட்டணி கட்சித் தலைவர்களான கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி உள்ளிட்டோரும் வெளிநடப்பு செய்தனர்.