சூடுபிடிக்கும் ஸ்ரீரங்கம்: ஓ.பி.எஸ். பணம் கொடுக்க உத்தரவிட்டதாக திமுக பரபரப்பு புகார்!
திருச்சி: ஸ்ரீரங்கம் தொகுதியில் வாக்காளர்களுக்குப் பணம் தர முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்தான் உத்தரவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக கூறியுள்ள புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி பணம் விநியோகிக்க உத்தரவிட்ட முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திருச்சியில் முகாமிட்டுள்ள மத்திய தேர்தல் சிறப்பு பார்வையாளர் அனில் குமார் ஷாவிடம், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு ஆகியோர் நேரில் புகார் அளித்துள்ளனர்.
அதில், ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் விதிமுறைகள் அனைத்தும் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன. அதிகாரிகள் ஒத்துழைப்புடன் ஆளும் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து போன் மூலமாகவும், எஸ்.எம்.எஸ். மூலமாகவும், நேரிலும் புகார் கூறி வருகிறோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
வெளியூரை சேர்ந்த அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் ஸ்ரீரங்கம் பகுதிகளில் தங்கி இருந்து பண விநியோகம் செய்து வருகின்றனர். 50 வாக்காளர்களுக்கு ஒரு அ.தி.மு.க.வினர் என தெருவிற்கு தெரு அ.தி.மு.க.வினர் பணம் கொடுத்து வருகின்றனர். 10-க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டும் இதை தடுக்க முடியவில்லை.
எனவே இந்த இடைத்தேர்தல் நேர்மையாகவும், அமைதியாகவும் நடைபெற தேர்தல் சிறப்பு பார்வையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தேர்தல் ஆணையம் மீதும், ஜன நாயகத்தின் மீதும் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை வீணாகி விடும் என்று திமுகவினர் கூறியுள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர். எஸ். பாரதி, ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலையொட்டி அதிமுகவினர் வாக்காளர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் பணம் விநியோகித்து வருவதாக குற்றச்சாட்டு அதிகரித்துள்ளது. பணம் விநியோகத்தின்போது பிடிபட்ட பல்வேறு அதிமுகவினரிடம் நடத்திய விசாரணையில் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவுபடியே பணம் விநியோகிகப்பட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து புகார் அளித்துள்ளோம். நடவடிக்கை எடுப்பதாக கூறியிருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
சக்சேனாவிடமும் புகார்
இதேபோல, ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுகவினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபடுவதாகவும், அதிமுகவுக்கு ஆதரவாக தேர்தல் அதிகாரிகள் செயல்படுவதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனாவிடம் திமுக புகார் மனுவை அளித்துள்ளது.