தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்? லயோலா கல்லூரி முன்னாள் மாணவர் அமைப்பு சர்வே
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பல முனை போட்டி நிலவுகிறது. இதில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களின் அமைப்பான "பண்பாடு மக்கள் தொடர்பகம்" 234 தொகுதிகளிலும் கள ஆய்வு நடத்தி கருத்து கணிப்பு மேற்கொண்டது.
மார்ச் 29ம் தேதி முதல் ஏப்ரல் 28ம் தேதி வரை ஒரு மாதமாக இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. தொகுதிக்கு, 50 பேர் வீதம், 234 தொகுதிகளிலும் களஆய்வு நடத்தி, கருத்து கணிப்பு மேற்கொண்டது.
இந்த கருத்துக் கணிப்பின் முடிவில் வெளியாகியுள்ள தகவல்கள், இவைதான்:
திமுகவுக்கு ஆதரவு
கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 39.4 சதவீதம் பேர் திமுகவும், 35.22 சதவீதம் பேர் அதிமுகவும் ஆட்சியை பிடிக்கும் என, கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளனர்.
3வது இடத்தில் ம.ந.கூ
தேமுதிக-மக்கள் நலக் கூட்டணிக்கு 12.34 சதவீதம் பேரும், பாமகவுக்கு 4.72 சதவீதம் பேரும், பாஜகவுக்கு 3.11 சதவீதம் பேரும், நாம் தமிழர் கட்சிக்கு 1.21 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சீட்டுகள்
கருத்து கணிப்பு ஆய்வுப்படி திமுகவுக்கு 112 முதல் 124 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும், அதிமுக கூட்டணிக்கு 67 முதல் 90 இடங்களில் வெற்றி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
பாஜகவுக்கு ஒன்றிரெண்டு
தேமுதிக-மக்கள் நலக்கூட்டணிக்கு 5 முதல் 11 இடங்களில் வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும், பாமகவுக்கு 3 முதல் 7 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. பாஜகவுக்கு ஒன்று அல்லது இரண்டு இடங்களில் வெற்றி கிடைக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
வாக்கு பிரிப்பு
தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி பிரிக்கும் ஓட்டுகள், திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுக்கு கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று, கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. அதேநேரம், ஜாதி ரீதியிலான கட்சிகளுக்கு, அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.
திமுக தேர்தல் அறிக்கை
கட்சிகள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகளில், திமுகவின் தேர்தல் அறிக்கை அதிக நம்பிக்கை ஏற்படுத்துவதாக, கருத்து கணிப்பில் மக்கள் கூறியுள்ளனர். இந்த பட்டியலில், பாமகவுக்கு 2வது இடம் கிடைத்துள்ளது.
கருணாநிதி முதல்வர்
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு, திமுக தலைவர் கருணாநிதிக்கு 88.33 சதவிகிதமும், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு 81.30 சதவிகிதமும், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு 77.99 சதவிகிதமும், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணிக்கு 35.58 சதவிகிதமும், தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு 30.58 சதவிகிதமும் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தமிழிசைக்கு வரவேற்பு
பாஜக தலைவர் டாக்டர் தமிழிசையை 20.80 சதவீதம் பேரும், சீமானை 17.38 சதவீதம் பேரும், வாசனை 16.29 சதவீதம் பேரும், திருமாவளவனை 14.71 சதவீதம் பேரும் அடுத்த முதல்வராக ஆதரவு தந்துள்ளனர்.
மாற்றே இல்லையாம்
அதுபோல தமிழ்நாட்டில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் மாற்றாக எந்த கட்சியும் இல்லை என்று 65.9 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
திணறல்
இந்த கருத்து கணிப்பு திமுகவிற்கு ஆதரவாக உள்ளதே, எதன் அடிப்படையில் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது, இதில் கலந்து கொண்ட 50 பேர் யார், அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடுவதற்கு முன்னரே எப்படி கருத்துகணிப்பை வெளியிட்டீர்கள், கருத்து கணிப்பு நடத்தப்பட்ட காலகட்டத்தில் மக்கள் நலக்கூட்டணி தேர்தல் அறிக்கையும் வெளியிடவில்லையே? உங்களுடைய கருத்து கணிப்பு எப்படி சாத்தியம் என்பது போன்ற நிருபர்களின் பல கேள்விகளுக்கு சரியான பதிலை கருத்து கணிப்பு குழு கூற முடியவில்லை. ஏற்கனவே ஒருமுறை அடுத்த முதல்வர் குறித்த கருத்து கணிப்பை நடத்தி இதே குழு விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தது நினைவிருக்கலாம்.