அறைகூவலுக்கு திமுக பயப்பட்டதில்லை.. பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதாவுக்கு, கருணாநிதி பதிலடி
சென்னை: தி.மு.க.விற்கு எந்த நேரத்திலும் சஞ்சலம் இல்லை. சலசலப்பு இல்லை. தி.மு.க. என்றும் அஞ்சியதில்லை. காவல்துறையின் கண்டிப்பிற்கு ஆளும் கட்சியினுடைய அறைகூவலுக்கும் தி.மு.க. என்றைக்கும் பயந்து ஓதுங்கியதில்லை. அவைகளை எல்லாம் எண்ணித்தான் இத்தனை ஆண்டு காலம் இந்த இயக்கம் வளர்ந்து இருக்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி பேசினார்.
'சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு' கண்டனப் பொதுக்கூட்டம் சென்னை தங்கசாலையில் நேற்று இரவு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்றது.
இதில் திமுக தலைவர் கருணாநிதி பேசியதாவது: என்னை பொறுத்தவரை, நான் தேர்தலில் ஏற்படுகிற வெற்றி தோல்விகளை பற்றி கவலைப்படுகிறவன் அல்ல. குறிப்பாக இந்த தேர்தலிலே நான் ஆட்சியை கைப்பற்ற முடியாத ஒரு சூழ்நிலைக்கு ஆளானது என்றால் அதற்கு காரணம் மேடையில் அமர்ந்திருக்கின்ற நாங்கள் அல்ல. எதிரே வீற்றிருக்கின்ற பல்லாயிரக்கணக்கான நீங்கள் தான்.
கவலையில்லை
நான் இவற்றை பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. எத்தனையோ தேர்தல்களில் தி.மு.க. தோற்றிருக்கிறது. இதே தங்க சாலையில், அண்ணா போட்டியிட்டு வெற்றி பெற முடியாமல் போய் இருக்கிறது. அதனால் அண்ணாவை இந்த உலகம் மறந்து விடவில்லை. அண்ணாவால் வளர்க்கப்பட்ட நாங்கள் தான் உங்களை எல்லாம் பல்லாயிரக்கணக்கில் பெற்றிருக்கிறோம்.
அஞ்சியதில்லை
இத்தகைய தொண்டர்களை பெற்றுள்ள தி.மு.க.விற்கு எந்த நேரத்திலும் சஞ்சலம் இல்லை. சலசலப்பு இல்லை. தி.மு.க. என்றும் அஞ்சியதில்லை. காவல்துறையின் கண்டிப்பிற்கு ஆளும் கட்சியினுடைய அறைகூவலுக்கும் தி.மு.க. என்றைக்கும் பயந்து ஓதுங்கியதில்லை. அவைகளை எல்லாம் எண்ணித்தான் இத்தனை ஆண்டு காலம் இந்த இயக்கம் வளர்ந்து இருக்கிறது. இன்னும் வளரக் கூடிய கட்சி தான் தி.மு.க. யாரும் சந்தேகப்பட தேவையில்லை.
உண்ணாவிரதம்
இன்னும் சாத்வீக முறையில் இதே போன்று பொதுக்கூட்டங்களை நடத்தி கருத்துகளை எடுத்து உரைக்க வேண்டும். இதற்காக விரைவில் கழக செயற்குழு பொதுக்குழுவில் கலந்து கொண்டு மாவட்ட, வட்ட தொண்டர்களை கலந்து கொண்டு, விரைவில் சில கருத்துகளை மக்களிடம் எடுத்து உரைக்க ஒரு உண்ணாவிரதம் மூலமாகவும், தமிழகத்தில் எத்தகைய அநீதிகள் சட்டமன்றத்தில் முதல்வரால் ஏற்படுகிறது என்று எடுத்துக்காட்டி இதற்கெல்லாம் உங்கள் தீர்வு என்ன என்று கேட்கின்ற வகையில் உண்ணாவிரதத்தை நடத்தி காட்டுவோம்.
பிரதமர் அலுவலகம்
தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட இந்த சோகத்தை நீக்கி, தமிழ்நாட்டை பலம் வாய்ந்த மாநிலமாக மாற்றுவதற்கு நாம் அனைவரும் ஒற்றுமையாக சேர்ந்து போராடுவோம். சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுகிற சமயத்தில் தமிழ்நாட்டில் பிரதமர் அலுவலகத்தில் இருந்து செய்திகள் வந்தது. நாம் தான் ஜெயிக்கிறோம் உங்களுடைய நடவடிக்கைகளை செய்யுங்கள் என்று எழுதியிருந்தது. அந்த செய்தியைதொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாவட்டங்களிலும், எல்லா வாக்குச்சாவடி மையங்களிலும் தி.மு.க.வை வீழ்த்துவதற்கான சூழ்ச்சிகள் பின்னப்பட்டதா?
புல்லுருவிகளுக்கு தண்டனை
நம்மை ஏமாற்றி, தோற்கடிக்க யார்? யார்? புல்லுருவிகளாக இருந்தார்கள். யார்? யார்? அதற்கு துணை போனார்கள் என்பதை எல்லாம் நான் அறிவேன். அவர்களுக்கு தகுந்த தண்டனையை எதிர்காலத்திலே ஜனநாயகம் தீர்ப்பாக வழங்கும். அந்த ஜனநாயகம் இங்கு மறுபடியும் மறுமலர்ச்சி பெற்று தமிழகத்தை தமிழன் மீண்டும் ஆளுவான் என்ற நம்பிக்கையை நோக்கி நாம் தொடர்ந்து பயணம் செய்வோம். இவ்வாறு அவர் பேசினார்.
ஜெயலலிதாவுக்கு பதிலடி
சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கை மீது முதல்வர் ஜெயலலிதா நேற்று பதிலளித்து பேசினார். அப்போது தைரியம் இருந்தால் சஸ்பெண்ட் தண்டனைக்கு உள்ளாகாத திமுக எம்.எல்.ஏவான கருணாநிதி சட்டசபையில் வந்து பேசியிருக்கலாமே. நான் திமுக ஆட்சி காலத்தில் அப்படி பேசியிருந்தேனே என்று கூறினார். அதற்கு பதிலளிக்கும் வகையில் கருணாநிதி பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.